யாழ்ப்பாணத்தை மீண்டும் அச்சுறுத்துகின்றது கொரோனா ; அச்சமடையத் தேவையில்லை என்கிறார் மருத்துவ அதிகாரி சத்தியமூர்த்தி : உச்சகட்டத்தில் அபாயம் இருக்கிறது என எச்சரிக்கிறார் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் !

Wednesday, April 15th, 2020

வடபகுதியில் கொரோனா தொற்று சமூகத்தில் பரவவில்லை. அதனால் மக்கள் அச்சமடைய தேவையில்லை. எனினும், விழிப்புடன் இருப்பது அவசியம் என யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். அத்துடன் ஊரடங்கு நிலவரம் மற்றும் கொரோனாவின் எதிர்காலம் பற்றி தெளிவாக கூற முடியாது எனவும் இது உலகளாவிய தொற்று நோய் என்றும்  அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் (15) யாழ் போதனா வைத்தியசாலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் மேலும் தெரிவிக்கையில் –

கொரோனா தொற்றில் அதிகமானவர்கள் தொற்றிற்கான அறிகுறிகளை வெளிப்படுத்தாதவர்களாக இருந்திருப்பார்கள். ஆனால் நோய்க்காவிகளாக இருப்பார்கள். இதில் அவதானமாக எல்லோரும் இருக்க வேண்டும். தற்போது யாழ்ப்பாணத்தில் இனங்காணப்பட்டவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் முகாமில் அடையாளம் காணப்பட்டதால் பிரச்சனைகள் இல்லை. ஆனால், சமூகத்தில் யாருக்காவது அறிகுறியில்லாமல் தொற்று ஏற்பட்டிருந்தால் அது வேறு ஒருவருக்கு பரவினால், அதிகமானோருக்கு  பரவக்கூடிய நிலைமையுள்ளது.

யாழ்ப்பாணத்தின் தற்போதைய நிலை தொடர்பாக ஜனாதிபதி செயலணி முடிவுகளை எடுக்கிறது. எமது கருத்துக்களை கேட்கும்போது, நிலவரங்களை தெரிவிக்கிறோம் என்று தெரிவித்த வைத்தியர் சத்தியமூர்த்தி  ஊரடங்கு பற்றியோ அன்றி  நோயின் எதிர்காலம் பற்றியோ உடனடியாக எதுவும் கூறிவிட முடியாது. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனா தொற்று வடக்கில் எமது சமூகத்தில் பரவவில்லையென்பது தெரிகிறது. என்றாலும், நாம் அவதானமாக இருக்க வேண்டும். பிசிஆர் பரிசோதனைக்கு தேவையான உபகரணங்கள் ஓரளவிற்கு கையிருப்பில் உள்ளது. மத்திய அரசு மூன்று நாளுக்கு ஒருமுறை அவற்றை எமக்கு வழங்கி வருகிறது

யாழ் போதனா வைத்தியசாலையில் உள்ள இயந்திரத்தின் மூலம் நாளொன்றுக்கு 72 பரிசோதனை செய்யலாம். விரைவில் யாழ் போதனா வைத்தியசாலையிலுள்ள இயந்திரன் மூலமும் பரிசோதனை மேற்கொள்ளவுள்ளோம்.

அத்துடன் தனிமைப்படுத்தல் செயற்பாட்டை இராணுவமும், சுகாதார அமைச்சும் மேற்கொள்கிறார்கள். இது பற்றி என்னால் தெளிவாக கூற முடியா விட்டாலும், பாதிரியாருடன் நெருக்கமாக பழகியவர்கள் என்ற அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

அவர்கள் என்ன வழியால் தொற்றிற்குள்ளானார்கள் என்பதை என்னால் தெளிவாக கூற முடியாது. ஆனால், அங்கு தொற்று ஏற்பட்ட ஒருவர் ஊடாக மற்றவர்களிற்கு தொற்று ஏற்பட்டிருக்கலாமென்ற சந்தேகம் நிலவுகிறது என்றார்.

இதுநேரம் யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம் உறுதிசெய்யப்பட்ட 8 தொற்றாளர்களின் எண்ணிக்கையுடன் கொரோனா வைரஸ் தொடர்பில் துறைசார் நிபுணர்கள் தெரிவித்துள்ள கருத்துக்களின் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் உச்சகட்டத்தில் இருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் எச்சரித்துள்ளார்.

அத்துடன் குறித்த வைரஸ் பரவலை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காவி்ட்டால் நிலைமை மேலும் பாரதூரமாக மாறக்கூடிய வாய்ப்பும் அதிகம் உள்ளதாக அவர் எச்சரிக்கையும் வெளியிட்டுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் 15ஆம் திகதி அரியாலை பகுதியில் உள்ள தேவாலயத்தில் ஆராதனை நடத்திய சுவிஸ் போதகரோடு அதிக அளவில் தொடர்புபட்ட 20 பேர் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்திலில் கடந்த மார்ச் மாதம் 23 ஆம் திகதி தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் மிகுதியாக இருந்த 14 பேருக்கு இரண்டாம் கட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது அதில் 8 பேருக்கு தொற்று உள்ளமை நேற்றையதினம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் இவர்களில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் இதில் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் நேற்றையதினம் அடையாளம் காணப்டபட்ட 14 கொரோனா வைரஸ் தொற்றாளர்களுடன்  இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 233 ஆக  அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 61 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் ஏழு பேர்  உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் இலங்கையில் கடந்த இரண்டு நாட்களில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்களிடம் எந்தவொரு நோய் அறிகளும் தென்பட்டிருக்கவில்லை என சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்த அவர்களிடம் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலமாகவே அவர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது என்றும் கொரோனா வைரஸ் தொற்றானது அறிகுறிகள் இல்லாமலும் தாக்கலாம் எனவும்  சுகாதார பரிசோதகர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: