யாழில் தீபாவளி நாளில் களோபரம் – நேற்று இருவர் பலி – இன்று ஒருவர் வைத்தியசாலையில்!

Saturday, November 14th, 2020

யாழ்ப்பாணம் கோப்பாய் சந்தியில் இன்றுகாலை இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

கோப்பாய் சந்திக்கு அண்மையிலுள்ள இறைச்சிக்கடையில் இந்த சம்பவம் இடம்பெற்றது.

இறைச்சிக்கடை உரிமையாளருக்கும், வாடிக்கையாளருக்குமிடையில் ஏற்பட்ட வாய்த் தர்க்கத்தையடுத்து, இறைச்சிக்கடை உரிமையாளரால் இறைச்சி வெட்ட பயன்படுத்திய கத்தியினால் வாடிக்கையாளரை குத்திக் காயப்படுத்தினார்.

இதனையடுத்து அவரை பொலிசார் கைது செய்துள்ளதுடன் காயமடைந்தவர் கோப்பாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை குடும்பங்களுக்கு இடையிலான முரண்பாடு கைலப்பாக உருவெடுத்ததில் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

குறித்த சம்பவம் சுழிபுரம் மத்தி, குடாக்கனை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்றது என்று வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றைய ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்படும் போது உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த 56 வயதுடைய சின்னவன் செல்வம் மற்றும் 31 வயதுடைய இராசன் தேவராசா என்ற இருவருமே உயிரிழந்துள்ளனர்.

நேற்று மாலையிலிருந்து முறுகல் நிலை காணப்பட்டுள்ளது. அதுதொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்டது. எனினும் பொலிஸார் சம்பவ இடத்துக்கு வரவில்லை என்று அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் தெரிவித்துள்ளனர்

அதனால் பின்னிரவு வேளை ஒரு பகுதியினர் வாள்களுடன் மற்றைய பகுதியினரின் வீட்டுக்குள் புகுந்து சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். அதனால் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் இந்த இரட்டைக் கொலை தொடர்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலிலுள்ளனர். எனினும் பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட இருவர் தலைமறைவாகியுள்ளனர் என்று வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: