யாழில் திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் நபர் – பொதுமக்களிடம் உதவி கோரியுள்ள பொலிஸார்!

Saturday, August 31st, 2024

யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதிகளில் உள்ள வீடுகளில் திருட்டில் ஈடுபட்டு வரும்  சந்தேகநபர் தொடர்பிலான விபரங்கள் தெரிந்தவர்களை பொலிஸாருக்கு தகவல் வழங்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர்

குறித்த சந்தேக நபர் திருட்டில் ஈடுபடுவது தொடர்பிலான காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தென்மராட்சி பகுதிகளில் அண்மைக்காலமாக வீட்டில் உள்ளவர்கள் வெளியில் செல்லும் நேரங்களில் வீடுகளுக்கு புகுந்த திருடும் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் , நேற்றைய தினம் வியாழக்கிழமை சாவகச்சேரி பகுதியில் உள்ள வீடொன்றில் ஆள்கள் அற்ற நேரம் புகுந்த நபர் ஒருவர் வீட்டில் இருந்த பெருந்தொகை பணம் மற்றும் பெறுமதியான பொருட்களை திருடி சென்றுள்ளார்.

குறித்த சம்பவம் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளது. வீட்டினுள் நுழையும் போது ஒரு சேர்ட்டும் , திருடிய பின்னர் வீட்டில் இருந்து வெளியேறும் போது வேறு ஒரு சேர்ட்டும் அணிந்து சந்தேகநபர் தப்பி சென்றமை பதிவாகியுள்ளது.

குறித்த நபர் தொடர்பிலான விபரங்கள் அறிந்தவர்கள், சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் 0718591337 எனும் தொலைபேசி இலக்கம் ஊடாகவே  அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அறிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

000

Related posts: