யாழில் சந்தேகநபரை தாக்கிய உப பொலிஸ் உத்தியோகத்தர் மீது அதிரடி நடவடிக்கை!

Sunday, January 19th, 2020

ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் தடுப்புக் காவலில் இருந்த சந்தேகநபரை மிக மோசமாகக் தாக்கிய உப பொலிஸ் பரிசோதகர் உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

குறித்த உப பொலிஸ் பரிசோதகர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் நபரொருவருடன் முரண்பட்ட சந்தேகத்தில் நபர் ஒருவரை ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பொலிஸார் கைது செய்தனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்டவரை பொலிஸ் நிலையத் தடுப்புக் காவலில் வைத்து உப பொலிஸ் பரிசோதகர் மிக மோசமாகத் தாக்கியதில், கையில் வெடிப்பு ஏற்பட்டு இரத்தம் வந்த நிலையிலும் மிக மோசமாக தாக்கியுள்ளார்.

இந்நிலையில் தாக்குதலுக்குள்ளான நபரை மருத்துவமனையில் அனுமதிக்காது ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் முற்படுத்தியுள்ளனர்.

சந்தேகநபரின் உடலில் ஏற்பட்ட காயங்கள் மற்றும் உடல்நிலை குறித்து அவதானித்த நீதவான் அது தொடர்பாக சந்தேகநபரிடம் வினவிய போது, தன்னை பொலிஸ் நிலையத் தடுப்புக் காவலில் வைத்து உப பொலிஸ் பரிசோதகர் மூர்க்கத்தனமாக தாக்கியதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதனையடுத்து சந்தேகநபரை வைத்திய சிகிச்சைக்கு உட்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டதுடன், உப பொலிஸ் பரிசோதகர் தொடர்பாக பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு கட்டளையிட்டார்.

இதனையடுத்து குறித்த உப பொலிஸ் பரிசோதகர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த உப பொலிஸ் பரிசோதகர் தொடர்பாக பல்வேறு முறைப்பாடுகளை பொதுமக்கள் தெரிவித்துள்ளதுடன், அவரது தனிப்பட்ட ஒழுக்கங்கள் தொடர்பாகவும் குற்றம் சுமத்தியுள்ளனர்.

Related posts: