மே நடுப்பகுதியில் நாடாளுமன்றத் தேர்தல் ?
Tuesday, April 7th, 2020“மே மாதம் நடுப்பகுதியில் பொதுத்தேர்தலை நடத்துவதற்கான முயற்சிகளை முன்னெடுத்துள்ளோம். பலமான அரசு தோற்றம் பெற்றால் மாத்திரமே அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு, பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும்” என ஆளும் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இது விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –
“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான இடைக்கால அரசுக்கு மக்களாணை கிடைக்கப்பெறவில்லை. ஜனாதிபதி மாத்திரமே, மக்களால் தெரிவு செய்யப்பட்டார்.
பல விடயங்களைச் செயற்படுத்த இடைக்கால அரசுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லாத காரணத்தால் பல தடைகள் ஏற்பட்டன.
இவ்வாறான விடயங்களை கருத்திற் கொண்டு, ஜனாதிபதி நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத்தேர்தலை நடத்துவதற்கான திகதியை குறித்தொதுக்கினார்.
கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஏப்ரல் மாதம் இடம்பெறவிருந்த பொதுத்தேர்தல் திகதி குறிப்பிடாமல் பிற்போடப்பட்டுள்ளது. தற்போது நாடு பொருளாதார ரீதியில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
பலமான அரசு தோற்றம் பெற்றால் மாத்திரமே நாட்டை அபிவிருத்திப் பாதையில் கொண்டு செல்ல முடியும். தற்போதைய நிலைமை சீர் செய்யப்பட்டதன் பின்னர் மே மாதம் நடுப்பகுதியில் பொதுத்தேர்தலை பாதுகாப்பான முறையில் நடத்த எதிர்பார்த்துள்ளோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
|
|