மேல் மாகாணத்திற்குள் நுழைந்து வெளியேற வேண்டாம் – ஆபத்தானது என எச்சரிக்கின்றார் பொது சுகாதார சேவைகளின் துணை இயக்குநர்!

Saturday, November 28th, 2020

அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து மேல் மாகாணத்தை விட்டு வெளியேறும் அல்லது நுழையும் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று பொது சுகாதார சேவைகளின் துணை இயக்குநர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் காணப்பட்ட கோவிட் நோயாளிகளில் பெரும்பாலோர் மேல் மாகாணம் அல்லது கொழும்பு நகரத்தைச் சேர்ந்தவர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வைத்தியர் ஹேமந்த ஹேரத் மேலும் கூறுகையில் –

மிகவும் சிக்கலான ஆபத்தான நிலைமை எழுந்துள்ளது. கொழும்பு நகரில் நாங்கள் பல பகுதிகளை தனிமைப்படுத்தியிருந்தாலும், பல்வேறு காரணங்களுக்காக அத்தியாவசிய சேவைகளுக்கான அனுமதியை மக்கள் பெறுகின்றார்கள்.

ஊழியர்கள் சில பகுதிகளிலிருந்து ஏனைய பகுதிகளுக்கு நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த முறைகள் காரணமாக மக்கள் தொடர்ந்து கொழும்பு நகருக்குள் சென்று வருகின்றனர்.

அதிக ஆபத்து நிறைந்த பகுதிகளில் மக்கள் நடமாட்டத்தில் அதிகபட்ச கட்டுப்பாடு இருந்தாலும், பாதிப்புக்கள் தொடர்ந்து ஏற்பட்ட வண்ணம் உள்ளது. இதனால், தீவின் பல்வேறு பகுதிகளிலிருந்து நோயாளிகள் உருவாகி வருகின்றனர்.

அந்த ஆதாரங்களைத் தேடும்போது, அவர்களில் பலர் கொழும்பு மற்றும் நாட்டின் பிற பகுதிகளுக்குச் சென்றிருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.

எனவே, எந்தவொரு கட்டாய காரணமும் இல்லாமல் கொழும்பு மற்றும் மேல் மாகாணத்திற்குள் நுழைந்து வெளியேற வேண்டாம் என்று நாங்கள் மக்களை கேட்டுக்கொள்கிறோம் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: