முன்பள்ளிகளை போட்டி மிகுந்த கல்வி வழங்கும் மற்றொரு பாடசாலையாக மாற்றாமல் குழந்தைகளுக்கு சுற்றுச்சூழலை அனுபவிக்க இடமளியுங்கள் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்து!

Thursday, June 17th, 2021

முன்பள்ளியை போட்டித்தன்மை மிகுந்த கல்வி வழங்கும் மற்றொரு பாடசாலையாக மாற்றாமல் குழந்தைகளுக்கு சுற்றுச்சூழலை அனுபவிக்க இடமளியுங்கள் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 2500 ரூபாய் கொடுப்பனவை பெற்றுக்கொடுக்கும் ‘குரு அபிமானி’ தேசிய நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துரைக்கும்போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போதுபிரதமர் மேலும் தெரிவிக்கையில் –

இந்த உலகில் ஒரு குழந்தை பிறக்கும்போது, அந்தக் குழந்தைக்கு உலகைப் பார்ப்பதற்கான முதல் அடித்தளம் முன்பள்ளியில் போடப்படுகின்றது. அதனால் முன்பள்ளிகள், பராமரிப்பு மையங்கள் என்ற இந்த பெயர்களைக் கொண்ட நிறுவனங்களை கல்வித்துறையில் மிக முக்கியமான பகுதிகளாக நாம் அடையாளம் கண்டுள்ளோம்.

அதுமட்டுமின்றி, சர்வதேச தரங்களுக்கு ஏற்ப முன்பள்ளிகளை இயக்குவதற்கான வழிமுறையையும் நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு கொள்கையில் சேர்த்துள்ளோம். அந்த நோக்கத்திற்காக முன்பள்ளிகளுக்கான இராஜாங்க அமைச்சர் பதவியை ஏற்படுத்தினோம். அதேநேரம் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு முறையான ஆசிரியர் பயிற்சி அளிப்பதும் முக்கியம். அவர்களது அறிவை பல்கலைக்கழக மட்டத்திலிருந்து பட்டதாரி நிலை வரை வளர்த்துக் கொள்ள ஒரு வாய்ப்பை கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் அவர்கள் வழங்கியுள்ளார்.

பிள்ளைகளுடன் சிரித்து, பாடல் பாடி அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாகத் தோன்றும் ஆனால் முன்பள்ளி ஆசிரியர்களின் வாழ்க்கையைப் பார்க்கும்போது, அவர்கள் மிகவும் பரிதாபகரமான வாழ்க்கையை வாழ்கிறார்கள்.

ஆனால் அவர்களில் பலர் பொருளாதார ரீதியாக செல்வந்தர்கள் அல்ல. ஒரு சிலரைத் தவிர, முன்பள்ளி ஆசிரியர்களுக்கு ஒரு நிலையான சம்பளம் கிடைப்பதில்லை என்பதையும் நாங்கள் அறிவோம்.

முழு நாடும் கொரோனா தொற்றுநோயை எதிர்கொள்ளும் நேரத்தில் முன்பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. பெரும்பாலான முன்பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளின் பெற்றோரிடமிருந்து குறைந்த பணத்துடன் பராமரிக்கப்படுகிறார்கள். தற்போது அப்பணம் கிடைப்பதில்லை. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு, இந்த முன்பள்ளி ஆசிரியரை ஒரு நிரந்தர சம்பளம் பெறும் தொழில்முறை நிலைக்கு கொண்டு வர முயற்சிக்கிறோம்.

முன்பள்ளி ஆசிரியர் ஒரு மேசை அல்லது நாற்காலிக்கு மட்டுப்படுத்தப்படவில்லை. ஒரு நாள் அவர்களால் ஓடவும் குதிக்கவும் முடியாது. அவர்கள் உண்மையிலேயே உதவியற்றவர்களாக மாறுகின்றனர். அவர்களுக்கு ஓய்வூதியம் கிடைப்பதில்லை. வேறு சலுகைகள் இல்லை.

2014 வரவுசெலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டபோது,  நிதி அமைச்சராகவும், ஜனாதிபதியாகவும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மாதத்திற்கு ரூ. 2,500 கொடுப்பனவு வழங்க முன்மொழிந்தேன். அந்நேரத்தில் படிப்படியாக அந்த தொகையை அதிகரித்து, முன்பள்ளி ஆசிரியர்களுக்கு அங்கீகாரம் கொண்டு வந்து சமூகத்தில் ஒரு சிறந்த இடத்திற்கு கொண்டு வருவோம் என்று நம்பினோம்.

இது ஒரு கொடுப்பனவு. இந்த பணம் வாழ போதுமானதாக இல்லை என்பதை நாங்கள் அறிவோம். முறையான பயிற்சிக்குப் பின்னர் முன்பள்ளி ஆசிரியருக்கு நிரந்தர மாத சம்பளத்தை அமைப்பதற்கான ஆரம்பம் இதுதான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இந்த உதவித்தொகையைப் பெற 25,000 க்கும் மேற்பட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் ஏற்கனவே தகுதி பெற்றுள்ளனர் என்று இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த தெரிவித்தார். ஆனால் இந்த கொடுப்பனவைப் பெற முன்பள்ளி ஆசிரியர்கள் அதிகம் உள்ளனர். தகுதி உள்ளவர்களுக்கு இந்த கொடுப்பனவை வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று நம்புகிறேன்.

நாட்டின் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுக்கும் 24 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள முன்மாதிரியான தரப்படுத்தப்பட்ட முன்பள்ளியை வழங்குவதே எங்கள் குறிக்கோள். அது மட்டுமல்லாமல், முன்பள்ளிகளை நாங்கள் தனித்தனியாகப் ஆராய்ந்து பார்க்கிறோம். குறைந்தபட்ச வசதிகளுடன் கூடிய முன்பள்ளிகளை அடையாளம் கண்டு அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான சாத்தியம் குறித்து சமீபத்தில் கல்வி அமைச்சர் மற்றும் செயலாளருடன் விவாதித்தோம். இது தொடர்பாக சுகாதார அமைச்சின் பரிந்துரைகளை வழங்கியவுடன் படிப்படியாக பாடசாலைகளை மீண்டும் திறப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

முன்பள்ளிகளை மீண்டும் தொடங்கும் போது, அந்த மலர்களைப் போன்ற குழந்தைகள் உங்களிடம் திரும்பி வருவார்கள். குழந்தைகளுக்காக வேலை செய்யும் உங்களிடம் ஒரு சிறிய கோரிக்கையை வைக்க விரும்புகிறேன் என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: