முன்னால் உள்ள தடைகளை விலக்கி கொரோனா ஒழிப்புக்காக சளைக்காது உறுதியுடன் உழைப்போம் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவிப்பு!

Tuesday, May 12th, 2020

மக்களின் இயல்பு வாழ்க்கையையும் பொருளாதாரத்தையும் செயற்திறனாகப் பேணி கொரோனா ஒழிப்புக்காக சளைக்காத தைரியத்துடன் செயற்பட வேண்டி நேரம் இது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தற்போது நாடு முழுவதும் பொருளாதார செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நோய்த்தொற்று வந்தபோதும் எமது தேசத்தில் பஞ்சம் ஏற்பட இடமளிக்கக்கூடாது. திட்டங்களை முன்னெடுக்கும் போது முன்னர் ஏற்பட்ட தவறுகளை பாடமாகக் கொண்டு அத்தகைய தவறுகள் மீண்டும் இடம்பெறாதிருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

வைரஸ் பரவலை தடுப்பதற்கு பொது இடங்களில் ஒன்றுகூடுபவர்களுக்கு அறிவூட்ட வேண்டியதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. பாடசாலை பிள்ளைகள் நடந்துகொள்ள வேண்டிய விதம் குறித்த வழிகாட்டல் சுகாதார அமைச்சினால் கல்வி அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளது. அப்பரிந்துரைகளின்படி பாடசாலைகளை திறக்கக்கூடிய வாய்ப்புகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு முன்னர் ஊடகங்களின் வாயிலாக பிள்ளைகளுக்கு விரிவாக அறிவூட்ட வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அத்துடன் சட்ட விரோத மதுபான பாவனை காரணமாக ஏற்படும் சுகாதார பிரச்சினைகளுடன், கிராமிய மக்கள் வாழ்க்கையிலும் பல்வேறு பிரச்சினைகள் உருவாகியுள்ளன. அதிக விலையில் சட்டவிரோத மதுபானம் விற்பனை செய்யப்படுவதும் தெரியவந்துள்ளதாக பாதுகாப்பு துறையினர் சுட்டிக்காட்டினர். இதன் மூலம் ஏற்படும் இடர் நிலைமை குறித்து சுகாதார அதிகாரிகளினால் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

வீடுகளில் இருக்க வேண்டியிருந்ததால் நகரப்புர மக்களின் வாழ்க்கையிலும் பெரும் அழுத்தங்கள் ஏற்பட்டுள்ளன. இது போன்ற நிலைமைகளை தவிர்ப்பதற்கு சுகாதார பரிந்துரைகளின் படி நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. உடல் ஆரோக்கியத்திற்காக உடற்பயிற்சிகள் மற்றும் ஏனைய உள ஆரோக்கிய செயற்பாடுகளையும் மீண்டும் ஆரம்பிக்க வேண்டும்.

தரவுகளை ஒரு முறைமைக்குள் கோவைப்படுத்தி, கடவுச் சீட்டுகள் மற்றும் அடையாள அட்டைகளை மாவட்ட மட்டத்தில் வழங்குவதை விரைவுபடுத்த முடியுமா என்று ஜனாதிபதி வினவினார். விவசாய அறுவடைகளை நீண்ட நாள் வைத்திருப்பதற்கான தொழிநுட்பம் மற்றும் முகாமைத்துவ முறைமைகளை மீண்டும் ஆராய்ந்து தேவைக்கு ஏற்ப பயன்படுத்துமாறும் ஜனாதிபதி செயலணியிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: