முன்கூட்டியே திட்டமிட்டு செயற்படுங்கள் – சேவைகளைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பவர்களிடம் இலங்கையிலுள்ள இந்திய தூதரகம் கோரிக்கை!

Tuesday, August 3rd, 2021

இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் வீசா மற்றும் ஏனைய சேவைகளைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பவர்கள், முன்கூட்டியே திட்டமிட்டு அதற்கமைவாக செயற்பட வேண்டுமென உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

தற்போது நாட்டிலுள்ள கொரோனா நிலைமைகளைக் கருத்திற் கொண்டு இந்த அறிவித்தல் விடுக்கப்படுவதாகவும் குறித்த தூதரகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் மேலும் தெரிவிக்கையில் –

வீசா மற்றும் ஏனைய சேவைகள் தொடர்பாக இலங்கை பிரஜைகளிடமிருந்து இந்திய உயர் ஸ்தானிகராலயம் பல்வேறு கோரிக்கைகளை பெற்றுள்ளது. சாத்தியமான சகல வழிகளிலும் இக்கோரிக்கைகளுக்கு சேவை வழங்குவதில் உயர் ஸ்தானிகராலயமும், உத்தியோகத்தர்களும் வழமைபோலவே அர்ப்பணிப்புடன் உள்ளனர்.

இலங்கையில் தற்போது காணப்படும் சூழ்நிலை தொடர்பான உத்தியோகபூர்வ தரவுகளுக்கு அமைவாக கொரோனா தொற்றுக்கு உள்ளாகுபவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்புக்களும் துரதிஷ்டவசமாக அதிகரித்த நிலையில் உள்ளதுடன் டெல்டா வகையான கொரோனா வைரஸ் உலகளாவிய ரீதியில் காணப்படும் நிலையிலும் பொதுமக்களின் நலன்களின் மீதான அக்கறை காரணமாக சூழலுக்கு ஏற்றவாறு அலுவலக கடமைகளை முன்னெடுப்பதற்கு உயர் ஸ்தானிகராலயம் தீர்மானித்துள்ளது.

இதன் காரணமாக வீசா மற்றும் ஏனைய கொன்சியூலர் சேவைகளுடன் தொடர்புடையவை உள்ளிட்ட பொதுமக்களுக்கான சேவைகளை பூர்த்திசெய்வதில் மேலதிக நேரம் செலவிடவேண்டிய சந்தர்ப்பங்களும் காணப்படுகின்றன.

மேல் குறிப்பிட்டுள்ள விடயங்களை கவனத்தில் கொண்டு உயர் ஸ்தானிகராலயமிடமிருந்து விசா மற்றும் கொன்சியூலர் சேவைகளை பெற்றுக்கொள்ள விரும்புபவர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு அதற்கமைவாக செயற்பட வேண்டுமென அறியத்தருகின்றோம்.

பாதுகாப்பானதும், கொரோனா சூழலுக்கு உகந்ததுமான பயணங்களின் மூலம் இருநாடுகளுக்கும் இடையிலான மக்கள் தொடர்பினை ஊக்குவித்து மிகவும் புராதனமானதும், நெருக்கமானதுமான நட்புறவை வலுப்படுத்துவதில் உயர் ஸ்தானிகராலயம் உறுதியான அர்ப்பணிப்பினைக் கொண்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: