முதலீட்டு செயல்முறைகளை எளிமையாக்க புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த தீர்மானம் – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிப்பு!

Saturday, June 17th, 2023

இலங்கையில் தற்போதுள்ள சிக்கலான சட்டங்களுக்குப் பதிலாக இந்த வருட இறுதிக்குள் முதலீடுகள் தொடர்பான புதிய சட்டம் கொண்டுவரப்படும் என முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

முதலீட்டு ஊக்குவிப்பு தொடர்பான அமைச்சர்களின் ஆலோசனைக் குழு கூட்டத்தில், இலங்கையில் முதலீடு செய்வதற்கான அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்வதில் உள்ள சிக்கல்கள் மற்றும் ஏனைய விடயங்கள் குறித்த உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

முதலீட்டாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் உட்பட வசதிகளை வழங்க உலக வர்த்தக மையத்தில் முதலீட்டாளர் வசதி மையம் நிறுவப்பட்டுள்ளது என்றும் இந்த மையம் அனைத்து அரச நிறுவனங்களுடனும் ஒருங்கிணைந்து செயற்படும் என்றும் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

முதலீட்டாளர்கள் தமது பிரச்சினைகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் தலைவர்களிடம் சமர்ப்பிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும், தமது பிரச்சினைகளை தாமதமின்றி தீர்த்துக்கொள்ள இந்த நிலையம் அவர்களுக்கு உதவும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

புதிய சட்டங்கள் அமுல்படுத்தப்படும் வரை தற்காலிக தீர்வாக இந்த நடைமுறை அமுலில் இருக்கும் என்றும் இலங்கையில் முதலீட்டாளர்கள் எதிர்நோக்கும் சிக்கலான சூழ்நிலைகள் அடுத்த வருடத்திற்குள் களையப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: