மீன்பிடி படகு ஏலம் தொடர்பில் இரு நாட்டு அரசாங்கங்களுக்கும் இடையே புரிந்துணர்வு உள்ளது – இந்திய உயர்ஸ்தானிகரம் தெரிவிப்பு!
Thursday, February 10th, 2022
சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டபோது இலங்கையினால் கைப்பற்றப்பட்டுள்ள மீன்பிடி படகுகளை ஏலம் விடுவது தொடர்பாக இலங்கை – இந்திய அரசாங்கங்ளுக்கு இடையே இருதரப்பு புரிந்துணர்வு காணப்படுவதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
அத்துடன் இலங்கையில் உள்ள பயன்படுத்த முடியாத மீன்பிடி படகுகளை அப்புறப்படுத்துவது குறித்து இறுதி முடிவு எடுப்பதற்காக தமிழகத்தைச் சேர்ந்த குழு ஒன்று இலங்கைக்கு வர உள்ளதாகவும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
அத்துடன் இந்திய உயர்ஸ்தானிகராலயம் மீண்டும் அதற்கான சந்தர்ப்பத்தை இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளது.
இதேவேளை, இலங்கையினால் பறிமுதல் செய்யப்பட்ட இந்திய மீன்பிடி படகுகளை ஏலம் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் இராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
இந்திய மீன்பிடி படகுகளை ஏலம் விடுவதன் மூலம் கிடைக்கும் தொகையில் 25 சதவீதத்தையாவது இலங்கை அரசு இந்தியாவுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தி இராமேஸ்வரம் மீன்வளத்துறை அலுவலகத்துக்கு முன்பாக போராட்டம் நடத்தப்பட்டது.
இதேவேளை, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்திய மீனவ பிரதிநிதிகள் குழுவுடன் இணையவழி கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார்
இலங்கையில் உள்ள இந்திய மீன்பிடி படகுகளை ஏலம் விடுவது குறித்தும் அதன்போது ஆலோசிக்கப்பட்டதுடன், பழைய படகுகள் மட்டுமே ஏலம் விடப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


