மாலபே தனியார் மருத்துவ கல்லூரி மூடப்படாது – உயர்கல்வி அமைச்சர் கிரியெல்ல!

Thursday, September 8th, 2016

மாலபே தனியார் மருத்துவ கல்லூரி மூடப்படாது, மூடவும் முடியாது என உயர்கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில்-

மாணவர்கள் பல்கலைக்கழகமொன்றுக்கு செல்வது கல்வி கற்பதற்காக. ஐக்கிய தேசியக் கட்சிக்கு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு பல்கலைக்கழகத்திற்குள் சங்கங்கள் கிடையாது. எனினும் நாடாளுமன்றிற்குள் பிரவேசிக்க முடியாத தரப்பினர் பல்கலைக்கழகங்களில் சங்கங்களை அமைத்துக்கொண்டுள்ளனர்.

ஒர் அரசியல் கட்சி குருணாகலில் நடைபெற்ற போராட்டத்திற்கு 50 பேருந்துகளை அனுப்பியுள்ளது. மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய அனைத்தும் வழங்கப்பட்டுள்ளது, இனி கொடுப்பதற்கு ஒன்றுமில்லை. கொடுக்கப்பட்ட ஒன்றை வாபஸ் பெற்றுக்கொள்ள முடியாது. சயிட்டம் பட்டக் கல்வியை மீளப் பெற்றுக்கொள்ள முடியுமா, இந்த மருத்துவ கல்லூரி கடந்த ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

ஆளும் கட்சியில் இருக்கும் போது மாலபே தனியார் மருத்துவ கல்லூரி உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா, எதிர்க்கட்சிக்கு சென்றதன் பின்னரா அதன் குறைகள் தெரிகின்றன. கொள்கையொன்று கிடையாது, வெட்கம் இல்லையா? மாலபே தனியார் மருத்துவ கல்லூரி மூடப்படாது. அவ்வாறு மூடினால் நீதிமன்றம் செல்ல நேரிடும்.

மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பிலான பிரச்சினைக்கு அனைத்து தரப்பினரும் இணைந்து தீர்வு காணுவோம், ஆளும் எதிர்க்கட்சியினர் அதற்கான ஒத்துழைப்பினை வழங்கவும் என உயர்கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் ஜே.வி.பி மற்றும் கூட்டு எதிர்க்கட்சியினர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது அமைச்சர் கிரியெல்ல இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

UNP

Related posts: