மானிப்பாயில் வீடுடைத்து கொள்ளை – மானிப்பாயில் திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பெண் உள்ளிட்ட இருவர் கைது!

Saturday, May 14th, 2022

மானிப்பாயில் வீடுடைத்து 30 இலட்சம் பெறுமதியான தங்க நகைகளைத் திருடிய குற்றச்சாட்டில் பெண் ஒருவர் உள்ளடங்களாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்த திருட்டு நகைகளை விற்பனை செய்ய உதவிய குற்றச்சாட்டில் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 4ஆம் திகதி மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உள்பட்ட சண்டிலிப்பாய் தொட்டிலடியில் உள்ள வீடொன்றில் அங்கு வசிப்பவர்கள் வெளியில் சென்றிருந்த வேளை வீடுடைத்து 30 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் திருடப்பட்டிருந்தன.

அதுதொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்டவரினால் முறைப்பாடு செய்யப்பட்டது.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

சம்பவ தினத்தன்று திருட்டு இடம்பெற்ற வீட்டுக்கு அண்மையாக உள்ள பகுதிகளில் பெறப்பட்ட சிசிரிவி காணொளிப் பதிவுகளின் அடிப்படையில் தெல்லிப்பழை வீமன்காமம் பகுதியைச் சேர்ந்த பெண் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் திருட்டு நகைகளை விற்பனை செய்ய உதவினார் என்ற குற்றச்சாட்டில் கிளிநொச்சியைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர்களிடமிருந்து திருட்டு நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேக நபர்கள் மூவரையும் நீதிமன்ற நடவடிக்கைக்கு உள்படுத்துவதற்காக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: