மாணவர் உயிரிழப்பு சம்பவம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணை – பொறுமை காக்குமாறு வலியுறுத்தல்!
Tuesday, October 25th, 2016யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக மாணவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பொலிஸ் திணைக்களத்தினால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
அநுராதபுரத்தில் இடம்பெற்ற சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் மெய்வல்லுநர் விளையாட்டு வைபவத்தில் கலந்துகொண்ட பின்னர் நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இவ்வாறான சம்பவங்களினால் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு பிரச்சினைகள் ஏற்படுமா என்று ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு நாம் பொறுமை காக்கவேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதிலளித்தார். இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடுவோர் இருக்கின்றனர். கடும்போக்கு சிந்தனையாளர்கள் இருக்கின்றனர். இவ்வாறானோர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் நாட்டின் நல்லிணக்கத்திற்கு எந்தவகையிலும் தடையாக அமையாது என்று அவர் கூறினார்.
தெற்கிலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றன. அவை தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையவில்லை. மன்னார் பிரதேசத்தில் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் தாக்குதல் சம்பவம் தொடர்பான முறையான விசாரணை முன்னெடுக்கப்பட்டுளதாகவும் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமையை நகைப்புக்குள்ளாக்கி பேசி வருவதாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு நான் பதிலளிக்க தயாரில்லை. நாட்டின் ஸ்திரத்தன்மை குறித்து ஜனாதிபதியும் பிரதமரும் கருத்து தெரிவித்துள்ளனர். நான் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் என்ற ரீதியில் முன்னாள் ஜனாதிபதியோ அரசியல்வாதிகளோ தெரிவிக்கும் கூற்றுக்களுக்கு நான் பதிலளிப்பதில்லை அது என் கடமையும் அல்ல என்றும் அவர் மேலும் கூறினார்.
Related posts:
|
|