மலக்கழிவகற்றும் பவுசர்களை ஜீ.பி.எஸ். தொழினுட்பத்தினூடாக கண்காணிக்க நடவடிக்கை – வடக்கு ஆளுநர் அறிவுறுத்து!

Friday, January 12th, 2024

யாழ்ப்பாணத்தில் மலக்கழிவுகள் உரியவாறு அப்புறப்படுத்தாமையால் பல்வேறு சிக்கல்களை எதிர்க்கொள்ள நேரிட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களிடம், ஆளுநர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் முறைப்பாடு முன்வைக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் தனியார் நிறுவங்களின் ஊடாக மலக்கழிவகற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும், பவுசர்களில் நிரப்பிச் செல்லப்படும் மலக்கழிவை உரியவாறு அப்புறப்படுத்துவதில்லை எனவும் ஆளுநரிடம் தெரிவிக்கப்பட்டது.

ஒரு சில பகுதிகளில் பொதுமக்கள் குடியிருப்புகளுக்கு அண்மையில் இவை கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடுகளும் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த விடயங்களை கேட்டறிந்துக் கொண்ட ஆளுநர் பின்வரும் நடவடிக்கைகளை அமுல்படுத்துமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

அத்துடன் மலக்கழிவகற்றும் பவுசர்களை ஜீ.பி.எஸ். தொழினுட்பத்தினூடாக கண்காணித்தல்.

மலக்கழிவகற்றும் செயற்பாடுகளில் ஈடுபடும் அனைத்து நிறுவனங்களும் மாகாண சுகாதார அமைச்சில் பதிவு செய்யப்பட வேண்டும்.

இந்த செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்படும் பவுசர்களில், நிறுவனத்தின் பெயர், பதிவு விபரங்கள் உள்ளிட்ட அனைத்து விடயங்களும் காட்சிப்படுத்தப்பட வேண்டும்.

இவர்களுக்கான ஒழுங்கு விதிகளை உள்ளுராட்சி நிறுவனங்கள் அறிவிக்க வேண்டும். குறித்த பவுசர்களை போக்குவரத்து பொலிசாரின் ஒத்துழைப்புடன் கண்காணிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியிருந்தார்

அத்துடன் இந்த கூட்டத்தில் உள்ளூராட்சிமன்ற திணைக்கள ஆணையாளர், யாழ்.மாநகர சபை ஆணையாளர், ஏனைய திணைக்களங்களின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: