மற்றொரு சுற்றுப் பேச்சுவார்த்தை அடுத்த மாதம் கொழும்பில்!
Tuesday, December 20th, 2016இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பாக இந்திய அரச அதிகாரிகளுடனான மற்றொரு சுற்றுப் பேச்சுவார்த்தை அடுத்த மாதம் 2ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இந்திய வெளிவிவகார அமைச்சர், மீன்பிடித்துறை அமைச்சர் ஆகியோர் தலைமையிலான குழுவொன்று இந்த பேச்சுவார்த்தையில் பங்குபற்றும்.
வாரத்தில் குறைந்தது மூன்று நாட்கள் இந்திய மீனவப் படகுகள் இலங்கை கடற்பரப்பினுள் பிரவேசிக்கின்றன. ஐயாயிரத்திற்கும் அதிகமான படகுகள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுகின்றன. இலங்கை கடற்பரப்பில் ஒரு வாரத்தில் சுமார் ஆறாயிரம் மெற்றிக்தொன் மீனை இந்திய மீனவர்கள் பிடித்துச் செல்கின்றனர். இதனால் இலங்கைக்கு சுமார் தொள்ளாயிரம் கோடி ரூபாவுக்கும் அதிகமான தொகை இழப்பு ஏற்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இருப்பினும் தென்னிந்திய மீனவப் படகுகள் இலங்கை கடற்பரப்பினுள் பிரவேசிப்பது தற்போது 50 வீதமாக குறைவடைந்துள்ளதாக அமைச்சர் அமரவீர தெரிவித்தார்.அத்துமீறி பிரவேசிக்கும் இந்தியப் படகுகளை இலங்கை கடற்படையினரும், கரையோர காவல் படையினரும் கைப்பற்றிக் கொள்வதே இதற்கான காரணமாகும்.என்று தெரிவித்த அமைச்சர் தாம் கடற்றொழில் அமைச்சராக பொறுப்பேற்றதன் பின்னர் கடற்படையினர் பொறுப்பேற்ற எந்தவொரு இந்தியப் படகையும் விடுவிக்கவில்லை என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
சட்ட நடவடிக்கைகளின் பின்னர் சகல படகுகளும் அரசுடைமை ஆக்கப்பட்டன. மனிதாபிமான அடிப்படையில் மீனவர்களை மட்டும் அரசு விடுவித்தது என்றும் அமைச்சர் கூறினார்.
Related posts:
|
|