மருந்து வகைகளை ஈரானிலிருந்து இறக்குமதி செய்வது குறித்து யோசனை!
Friday, January 13th, 2017
ஈரானில் தயாரிக்கப்படும் மருந்து வகைகள், சத்திரசிகிச்சை உபகரணங்கள் என்பனவற்றை இலங்கைக்கு இறக்குமதி செய்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக அரச தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து இலங்கைக்கான ஈரான் தூதுவர் மொஹமட் சயிரி அமிரானிக்கும் அமைச்சர் ராஜித்த சேனாரட்னவுக்குமிடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடல் சுகாதார அமைச்சில் இடம்பெற்றுள்ளது. இதன் போது ஈரானில் தயாரிக்கப்படும் மருந்து வகைகளை இலங்கைக்கு இறக்குமதி செய்வது தொடர்பான வாய்ப்புக்கள் பற்றி கண்டறியுமாறு அமைச்சர் ராஜித்த சேனாரட்ன அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கலாநிதி ரூமி மர்ஸூக்குக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
ஈரானிலிருந்து மருந்து தயாரிப்பு தொழில்நுட்பம், மருந்துகளையும் இறக்குமதி செய்வது தொடர்பான ஒப்பந்தம் 2005ஆம் ஆண்டில் கைச்சாத்திடப்பட்டது. இதற்கமைய, 37 மருந்து வகைகளும், பத்து வகையான மருத்துவ உபகரணங்களும் இறக்குமதி செய்யப்படவிருந்தன.
2012ஆம் ஆண்டில் இதேபோன்றதொரு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. ஈரான் தற்சமயம் 40 நாடுகளுக்கு மருந்து வகைகளை ஏற்றுமதி செய்கிறது.

Related posts:
|
|
|


