மரபணு பரிசோதனை அறிக்கை வாசித்தால் உங்களால் விளங்கிக்கொள்ள முடியுமா? வித்தியா சந்தேக நபர்களை நோக்கி கேட்ட ஊர்காவற்துறை நீதவான்!
Tuesday, September 6th, 2016
மரபணுப் பரிசோதனை அறிக்கை வாசித்தால் உங்களால் விளங்கிக்கொள்ள முடியுமா என ஊர்காவற்றுறை நீதவான் எம்.எல் றியால் வித்தியா சந்தேக நபர்களை நோக்கி கேட்டுள்ளார்.
புங்குடுதீவு பாடசாலை மாணவி படுகொலை தொடர்பான வழக்கு இன்று செவ்வாய்க்கிழமை (06) ஊர்காவற்றுறை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மன்றிற்கு விசாரணைக்காக அழைத்துவரப்பட்ட 12 சந்தேக நபர்களையும் நோக்கி நீதவான் ஏதாவது உங்கள் சார்பாக விண்ணப்பங்களை மேற்கொள்ள உள்ளீர்களா? எனக் கேட்டார். இதன் போது 5 ஆவது சந்தேக நபரான மகாலிங்கம் சசீந்திரன்,
தற்போது வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எங்களை யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். இதனைச் செவிமடுத்த நீதவான் இந்த விடயத்தை சிறைச்சாலை அத்தியட்சகரின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்கு உத்தரவிடுவதாகக் குறிப்பிட்டார்.
மூன்றாவது சந்தேக நபரான பூபாலசிங்கம் தவக்குமார், மரபணுப் பரிசோதனை அறிக்கையை இங்கே வாசித்துக் காட்டினால் இக்குற்றச்சாட்டுக்களில் இருந்து தான் விடுபடச் சாத்தியமுள்ளது என நீதவானிடம் கூறினார். இதனையடுத்து நீதவான் மரபணு பரிசோதனை அறிக்கையை வாசிப்பதானால் இங்கே உங்களால் விளங்கிக்கொள்ள முடியுமா? அதனைப் பொறுமையுடனும் ஆழமாகவும் வாசிக்க வேண்டும்.
அதுமாத்திரமல்லாமல் அவ்வறிக்கை தொடர்பாக சட்டமா அதிபரே தீர்மானிக்க வேண்டும். தற்போது குறித்த வழக்குத் தொடர்பாக அனைத்து அறிக்கைகளும் விசாரணை செய்யப்பட்டு நிறைவுற்ற நிலையில் சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனவே சற்றுப் பொறுமையாகவிருந்தால் உண்மை வெகு விரைவில் வெளிவரும் எனக் கூறினார்.
இன்றைய தினம் இரு தரப்பிலும் சட்டத்தரணிகள் எவரும் ஆஜராகவில்லை என்பதுடன் குற்றப்புலனாய்வு அதிகாரி மன்றில் ஆஜராகினார். அத்துடன் குறித்த வழக்கு எதிர்வரும் செப்டம்பர் மாதம்- 20 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் வழக்கு நிறைவடைந்த பின்னர் அனைத்துச் சந்தேக நபர்களும் தொடர் சங்கிலியுடன் இணைந்த கைவிலங்கு இடப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|