மக்கள் பிரதிநிதிகள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ!

Monday, December 30th, 2019

மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் செயற்பட வேண்டியது மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்பாகுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்தினார்.

அந்த குறிக்கோள்களை வெற்றிகொள்வதற்கு நகர சபைகளும் பிரதேச சபைகளும் செயற்திறனுடன் செயற்பட வேண்டியது காலத்தின் தேவையாகும் என்பதையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

செயற்திறன்மிக்க நாட்டை உருவாக்கும் நோக்கில் மாநகர சபைகள், நகர சபைகள் மற்றும் பிரதேச சபைகளின் தலைவர்களுக்கும் ஜனாதிபதிக்குமிடையே ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலின்போது தனது வெற்றிக்காக கீழ்மட்டத்திலிருந்து பெரும் சக்தியாக செயற்பட்ட அனைத்து உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களுக்கும் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி தனது நன்றியை தெரிவித்தார்.

“மகத்தான வெற்றியை பெற்றுக்கொடுத்த மக்களின் எதிர்பார்ப்புகளை உரியவாறு நிறைவேற்றுவதே எனக்கும் அனைத்து மக்கள் பிரதிநிதிகளுக்கும் மக்கள் கையளித்துள்ள சவால்மிக்க பொறுப்பாகும். இதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டியது அனைவரினதும் பொறுப்பாகும்.” என்பதை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

“கழிவுகளை வெளியேற்றுதல் முதல் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் செயற்பாடுகள் வரை நாம் செயற்படும் விதத்தினை மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர். தமது அன்றாட தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதில் மக்கள் சிரமங்களை சந்திக்கக்கூடாது. வினைத்திறனான மக்கள்நேய அரச சேவையை உறுதிப்படுத்த வேண்டியது அனைத்து அரச சேவையாளர்களினதும் கடமையாகும்.” என ஜனாதிபதி குறிப்பிட்டார். அரச சேவையானது ஊழல், மோசடியற்றதாகக் காணப்பட வேண்டுமென்பதையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

“நாட்டை அபிவிருத்தியின் பாதையில் கொண்டு சென்று, பொருளாதாரம் பலமாக கட்டியெழுப்பப்பட்ட நிலையில், 2015ஆம் ஆண்டில் அப்போதைய அரசாங்கம் தோல்வியடைந்தது. மக்கள் அப்போதைய அரசாங்கத்தை நிராகரித்தமைக்கான காரணங்களை புரிந்து செயற்பட வேண்டும். இல்லையேல் பெற்றுக்கொண்ட இந்த வெற்றியை முன்னோக்கி கொணடு செல்ல முடியாது.” என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

வீழ்ச்சியடைந்துள்ள தொழில்முயற்சிகளை ஊக்கப்படுத்தி, முதலீட்டாளர்களை பாதுகாத்து, இழந்த தொழில்வாய்ப்புக்களை மக்களுக்கு மீண்டும் பெற்றுக்கொடுக்க வேண்டும். அதனூடாகவே பொருளாதார வளர்ச்சியை அடையமுடியுமென ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 2015ஆம் ஆண்டிற்கு முன்னர் நாட்டின் மீது கொண்டிருந்த நம்பிக்கையை மீண்டும் ஏற்படுத்த வேண்டும். நாட்டை உரிய பாதையில் கொண்டு செல்லும் செயற்பாட்டில் புத்திஜீவிகளினதும் நிபுணர்களினதும் பங்களிப்பு பாரிய பக்கபலமாக அமையுமென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஏற்றுமதி விவசாய பயிர்களுடன் தொடர்பான நன்மைகளை தற்போது விவசாயிகள் பெற்றுக்கொண்டுள்ளனர். அதேபோன்று வரிச்சலுகை உள்ளிட்ட உபாய மார்க்கங்களின் நன்மைகளை ஒட்டுமொத்த மக்களுக்கும் பெற்றுக்கொடுக்க வேண்டும்.

19வது அரசியலமைப்புத்திருத்தம் அரச நிர்வாகத்திற்கு பாரிய தடையாகக் காணப்படுகின்றது. இதனை நீக்குவதற்கான பலமான பாராளுமன்றத்தின் தேவைப்பாட்டினை ஜனாதிபதி அவர்கள் வலியுறுத்தியதுடன், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கு ஏதுவான முதன்மை காரணி அதுவாகுமெனவும் குறிப்பிட்டார்.

Related posts: