போதைப்பொருள் தொடர்பான சட்டத்தில் திருத்தங்கள் அவசியம் – நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவிப்பு!

Friday, March 17th, 2023

போதைப்பொருள் தொடர்பான வழக்குகளில் தொடர்புடையவர்களைத் தண்டிப்பது தொடர்பான சட்டங்களில் திருத்தம் செய்வதில் நீதி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

இது குறித்து பின்பற்றப்படும் நடைமுறைகள் தொடர்பில் பொதுமக்களால் பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டதை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ விளக்கமளித்துள்ளார்.

போதைப்பொருள் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் பலர் பழிவாங்கும் காரணங்களுக்காக குற்றம் சாட்டப்பட்டவர்கள் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளதாக ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே இது தொடர்பில் கடுமையான கண்காணிப்பு நடைமுறைப்படுத்தப்படும். போதைப்பொருள் தொடர்பான சில மாதிரிகள் எப்போதாவது தவறாக இருக்கலாம்.

ஆனால் சில நேரங்களில், காவல்துறை அனுப்பிய கிட்டத்தட்ட 20 முதல் 30 சதவீதமான மாதிரிகள் தவறானவை என்று கண்டறியப்பட்டுள்ளன.

போதைப்பொருள் அல்லாத பொருட்கள்கூட போதைப்பொருள் மாதிரியாக எடுக்க அனுப்பப்படுகின்றன.

எனினும் இந்த பொருட்களுடன் சந்தேகத்துக்குரியவர் நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்படுகின்றபோது அவர் விளக்கமறியலுக்கு அனுப்பப்படுகிறார்.

சில மாதங்களுக்கு பின்னரே அவர் வைத்திருந்தது போதைப்பொருளல்ல என்ற சோதனை முடிவு கிடைக்கிறது. இதிலிருந்து சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவது தெளிவாகத் தெரிகிறது.

எனவே இந்த சட்டத்தில் சில சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று நீதியமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: