போக்குவரத்து அமைச்சின் நிறுவனங்களில் ஊழல், மோசடி இடம்பெறுமாயின் பாரபட்சமற்ற நடவடிக்கை – அமைச்சர் பந்துல குணவர்த்தன அறிவிப்பு!

Thursday, January 5th, 2023

புகையிரதம் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை உள்ளிட்ட நிறுவனங்களில் ஊழல் மோசடிகள் இடம்பெற்றிருந்தால், போக்குவரத்து அமைச்சின் கீழியங்கும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு இது தொடர்பில் குற்றத்தடுப்பு விசாரணை திணைக்களத்தில் முறைப்பாடு செய்து, உரிய நடவடிக்கை எடுக்குமென அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

ஊழல் மோசடிகள் தொடர்பில் குற்றத்தடுப்பு விசாரணை திணைக்களத்தில் முறைப்பாடு செய்து, பெறப்படும் பற்றுச் சீட்டை அமைச்சில் சமர்ப்பித்தால் உரிய நிறுவனம் மற்றும் அதிகாரிகளுக்கெதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் எந்த வித பாரபட்சமுமின்றி தண்டனை வழங்கவும் பின்னிற்கப் போவதில்லையென்றும் அமைச்சர் தெரிவித்தார்.

தகவல் திணைக்களத்தில் நேற்று (04) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

‘போக்குவரத்து ஆணைக்குழு திருடர்களின் குகையாக காணப்படுவதாக, தனியார் பஸ் உரிமையாளர் சங்க தலைவர் தெரிவித்துள்ளாரே, அது தொடர்பில் நீங்கள் கூறவிரும்புவதென்ன?’ எனக் கேட்டார். இதற்குப் பதிலளிக்கையிலே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர், போக்குவரத்து அமைச்சின் கீழ் செயற்படும் நிறுவனங்களில் ஊழல் மோசடி மற்றும் முறைகேடுகள் இடம்பெற்றால் அது தொடர்பில் எனக்கோ அல்லது அமைச்சின் செயலாளருக்கோ முறைப்பாடு செய்ய முடியும். அவ்வாறு செய்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: