பேஸ்புக் நிறுவனம் அதிரடி – 24 மணி நேரத்தில் 15 இலட்சம் வீடியோக்கள் நீக்கம்!

Tuesday, March 19th, 2019

நியூசிலாந்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள இரண்டு மசூதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெற்ற போது, மர்ம நபர்கள் திடீரென புகுந்து துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.

இதில், 49 பேர் பலியாகினர். மேலும் பலர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

துப்பாக்கி சூடு நடத்திய குற்றவாளி தன்னை அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த “பிரெண்டன் டாரன்ட்” என்று டுவிட்டரில் அடையாளம் காட்டினான். அத்துடன், 73 பக்கத்தில் தனது நோக்கங்களை தெரிவித்து இருந்தான்.

மேலும் ஆன்லைன் கேம்களில் வருவதைப் போல டாரன்ட், துப்பாக்கியினால் மக்களை கொன்று குவித்த வீடியோவினை நேரலையாக வெளியிட்டிருந்தான். இதனை கண்ட உலகின் பல்வேறு நாடுகளின் அரசும், மக்களும் கொதித்தெழுந்து, கடுமையான கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த இரக்கமற்ற செயல் அரங்கேறிய வீடியோ, சமூக வலைத்தளங்களில் பரவலாக பரப்பப்பட்டு வந்தது. இதையடுத்து இந்த வீடியோவின் எவ்வித பகிர்வும் சட்டத்திற்கு எதிரான மிகப்பெரிய வன்முறை என்றும், அதனை பேஸ்புக் மற்றும் அனைத்து சமூக வலைத்தளங்களும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் நியூசிலாந்து பிரதமர் ஜெசினா ஆர்டர்ன் உத்தரவிட்டார். அதன்படி சமூக வலைத்தளங்களில் உள்ள வீடியோக்கள் நீக்கப்பட்டன.

இதை அடுத்து பேஸ்புக் நிறுவனத்தின் நியூசிலாந்து செய்தி தொடர்பாளர் மியா கார்லிக் தெரிவிக்கையில் இந்த வீடியோ, இணையப் பக்கத்தில் பகிரப்படுவதை தடுக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதற்கென தனியாக ஒரு குழு, சிறந்த தொழில்நுட்பத்துடன் முழுவதும் அழிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. சம்பவம் நடந்த 24 மணி நேரத்தில் 1.5 மில்லியன் (15 இலட்சம்) வீடியோக்கள் அழிக்கப்பட்டுள்ளன. மேலும் பேஸ்புக் ஊழியர்கள் தொடர்ந்து செயலாற்றி வருகின்றனர் என்று அவர் கூறினார்.

Related posts: