பெண்களை பிரதிநிதித்துவப்படுத்துவதில் வடக்கு மற்றும் கிழக்கில் சிக்கல் – மகிந்த தேசப்பிரிய !

Saturday, February 24th, 2018

வடக்கு, கிழக்கில் உள்ள குறைந்தது 10 உள்ளூராட்சி சபைகளில், பெண்களுக்கான 25 வீத பிரதிநிதித்துவத்தை நடைமுறைப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சித் தேர்தல் சட்டத்தில் உள்ள குறைபாடுகளினால், குறைந்தது 10 உள்ளூராட்சி சபைகளில், பெண்களுக்கான 25 வீத இடங்களை ஒதுக்கீடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சட்டத்தின்படி உள்ளூராட்சி சபைகளில் பெண்களுக்கு 25 வீத இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும். இந்த 10 உள்ளூராட்சி சபைகளிலும், பெண் வேட்பாளர்களை நியமிப்பதில் சிக்கல்கள் எழுந்துள்ளன. வட்டார முறையில் ஒரு அரசியல் கட்சியின் சார்பில் ஆண் வேட்பாளர்கள் மாத்திரம் வெற்றி பெற்றிருந்தால், அந்தக் கட்சிக்குக் கிடைத்த விகிதார அடிப்படையிலான ஆசனங்களை பெண்களுக்கு ஒதுக்க வேண்டும்.

எனினும் 3 ஆசனங்களுக்குக் குறைவான ஆசனங்களைப் பெற்ற கட்சிகள், பெண்களை விகிதாசார முறையில் நியமிக்க வேண்டியதில்லை.

பெண்களுக்கு 25 வீத இடங்களை ஒதுக்க முடியாத நிலையில் உள்ள 10 உள்ளூராட்சி சபைகளுமே, வடக்கு கிழக்கில் தான் உள்ளன.

சாத்தியமானளவுக்கு பெண்களுக்கான 25 வீத ஒதுக்கீட்டை உறுதிப்படுத்த முயற்சிப்போம். இல்லாவிட்டால் எம்மால் ஒன்றும் செய்ய முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts: