புனித நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்!

Wednesday, July 6th, 2016

இலங்கை வாழ் முஸ்லிம்கள் இன்று புனித நோன்பு பெருநாளை கொண்டாடுகின்றனர்.

சந்திரனின் சுழற்சியை வைத்து கணக்கிடப்படும் இஸ்லாமிய மாதங்களில் ஒன்பதாவது மாதம் புனித ரமழான் மாதமாகும். இந்த நோன்பு பெருநாளை முன்னிட்டு நாட்டிலுள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் இன்று விசேட பெருநாள் தொழுகை பிரார்த்தனைகள் இடம்பெறுகின்றது விசேட அம்சமாகும்.

இஸ்லாத்தின் ஐம்பெருங் கடமைகளில் ஒன்றான நோன்பை ரமழான் மாதம் முழுவதும் நோற்ற பின்னர் ஈதுல் பித்ர் பெருநாள் கொண்டாடப்படுகின்றது.

அகிலத்திற்கும் ஓர் அருட்கொடையான புனித அல்குர்ஆன் ரமழான் மாதத்திலேயே பூமிக்கு அருளப்பெற்றது. இந்த மாதத்தில் விழித்திருந்து, பசித்திருந்து, தனித்திருந்து ஒரு மாதகாலமாக நோன்பு நோற்பதுடன், நோன்பானது ஒவ்வொரு முஸ்லிமுனுடைய புலனடக்கத்தையும், மனக் கட்டுப்பாட்டையும் உருவாக்கும் சிறந்த ஆன்மீக பயிற்சியாகவும் அமைந்துள்ளது.

வெறுமனே பசித்திருப்பதும், தாகித்திருப்பதும் மாத்திரமின்றி, இந்த பயிற்சியின் மூலம் இறையச்சத்தை தன்னகத்தே வளர்த்துக் கொள்வதே நோன்பின் அடிப்படை நோக்கமாகும் என்று அல் குர்ஆன் தெளிவுபடுத்தியுள்ளது.

ரமழான் மாதத்தை தொடர்ந்து ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டதும் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் கொண்டாடப்படுகின்றது.

இன்று புனித நோன்பு பெருநாளை கொண்டாடும் அனைத்து இஸ்லாமியர்களுக்கும் எமது EPDPNEWS.COM இணையத்தளம் ரமழான் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது.

Related posts: