புத்தாண்டு காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது – வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன உறுதி!

Sunday, March 20th, 2022

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு துறைமுகத்தில் தேக்கமடைந்துள்ள அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன் எதிர்வரும் வாரம்முதல் முழுமையாக விடுவிக்கப்படும் என தெரிவித்துள்ள வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன பண்டிகை காலத்தில் அத்தியாவசிய உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது எனவும் தெரிவித்துள்ளார்.

வர்த்தகத்துறை அமைச்சின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

அத்தியாவசிய உணவு பொருட்கள் மற்றும் மருந்து பொருட்களை தடையின்றி பெற்றுக்கொள்ள இந்திய அரசாங்கத்துடன் கடனுதவி திட்ட ஒப்பந்தம்  கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இவ்வொப்பந்தத்தை செயற்படுத்தும் பொறுப்பு வர்த்தகத்துறை அமைச்சுக்கும்,நிதியமைச்சுக்கும் மற்றும் தொடர்புடைய அரச நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

வர்த்தகத்துறை அமைச்சு இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் இவ்வருடத்திற்கு தேவையான அத்தியாவசிய மருந்து பொருட்கள் மற்றும் மருந்து பொருட்கள், சிமெந்து, ஆடைகள், கைத்தொழில் நடவடிக்கைக்கு தேவையான மூலப்பொருட்கள்,உரம் மற்றும் விலங்கு உணவு ஆகியவற்றை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ய பத்திரிகையில் மும்மொழிகளிலும் விளம்பரப்படுத்தியுள்ளது.

இந்தியாவிலிருந்து இறக்குமதி நடவடிக்கைகளை முன்னெடுக்கும் இறக்குமதியாளர்கள் குறித்த விளம்பரங்கள் ஊடாக தங்களின் ஆவணங்களை வர்த்தகத்துறை அமைச்சுக்கு அனுப்பி வைக்க வேண்டும். வர்த்தகத்துறை அமைச்சின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தின் ஊடாகவும் உரிய தகவல்களை இறக்குமதியாளர்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் எதி;ர்வரும் வாரம் முதல் முழுமையாக விடுவிக்கப்படும்.பண்டிகை காலத்தில் அத்தியாவசிய உணவு பொருட்களுக்கு எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: