புதிய செறிமானம் அடங்கிய எரிவாயுவின் தரம் தொடர்பில் இன்று அறிவிக்கப்படும் – நுகர்வோர் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தகவல்!

Tuesday, December 14th, 2021

லிட்ரோ சமையல் எரிவாயுவினால் கப்பல் ஊடாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட புதிய செறிமானம் அடங்கிய எரிவாயுவின் தரம் தொடர்பில் இன்றையதினம் அறிவிக்கவுள்ளதாக நுகர்வோர் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

நுகர்வோர் விவகாரங்கள் தொடர்பான அதிகார சபை, தர நிர்ணயம் உள்ளிட்ட சில நிறுவனங்களுடன் இன்று காலை நடத்தவுள்ள சந்திப்பை அடுத்து இந்த அறிவிப்பு வெளியிடப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த எரிவாயு கப்பலில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் அறிக்கைகள் இன்று காலை கிடைக்க பெறவுள்ளன.

இதன்பின்னரே, குறித்த எரிவாயு தரமானதா? இல்லையா? என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும்.

குறித்த கப்பலில் அடங்கியுள்ள எரிவாயு தரம் குறைந்ததாயின் அதனை மீள் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் சமையல் எரிவாயுவில், மணத்தை அறிந்துகொள்ளும் பதார்த்தமான, எ(த்)தில் மேகெப்டனின் அளவு, 14 க்கும் 15 க்கும் இடையில் இருக்க வேண்டும் என்ற போதிலும், அதற்கும் குறைந்த மட்டத்திலேயே அது இருப்பதாக தெரியவந்துள்ளது.

அதேநேரம், ப்ரொப்பேன் மற்றும் பியூட்டேன் விகிதங்கள் 29 க்கு 69 என்ற அடிப்படையில் இருப்பதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுயாதீன நிறுவனத்தின் பரிசீலனையின்படி, இந்த எரிவாயுவில் 33 சதவீத ப்ரொப்பேன் அடங்கியுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

லிட்ரோ நிறுவனத்தினால் நேற்று முன்தினம் 3,700 மெற்றிக் டன் அடங்கிய எரிவாயு கப்பல் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

இதனையடுத்து, அதிகாரிகள் அந்த எரிவாயுவின் மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: