பால் மா கொள்வனவுக்கு அரசு ரூ. 200 மில்லியன் ஒதுக்கீடு – 02 இலட்சம் மெ.தொ. கையிருப்பில்!

Monday, September 16th, 2024

அரசாங்கத்துக்கு சொந்தமான மில்கோ நிறுவனத்தின் நாளாந்த உற்பத்தி அதிகரித்துள்ளதையடுத்து, தற்போது உற்பத்தி செய்யப்பட்டுள்ள 200,000 மெற்றிக் தொன் பால்மாவை கொள்வனவு செய்வதற்கு, 200 மில்லியன் ரூபாவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகரித்துள்ளதாக விவசாய மற்றும்

பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார் நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் என்ற ரீதியில் தானும் இணைந்து நேற்று முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை இணங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ச.தொ.ச ஊடாக ஹைலண்ட் பால்மாவை விற்பனை செய்யும் நோக்கில் அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் வலியுறுத்தினார். முன்னர் நட்டத்தில் இயங்கி வந்த அரச நிறுவனமான மில்கோ நிறுவனம், தற்போது அது மாற்றமடைந்து இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்றப்பட்டுள்ளதாகவும்,

நாளாந்த பால் சேகரிப்பு 50,000 லீற்றரிலிருந்து இரண்டு இலட்சமாக அதிகரித்துள்ளதாகவும் நேற்றைய (13) அமைச்சரவைக் கூட்டத்தில் தாம் சுட்டிக்காட்டியதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

குறிப்பாக, பால் சம்பந்தப்பட்ட பொருட்கள் உற்பத்தி, பால் கொள்முதல் செய்து வந்த பெரும்பாலான நிறுவனங்கள் தற்போது பால் கொள்முதல் செய்வதை நிறுத்திவிட்டதனால், பால் பண்ணையாளர்களுக்கு சொந்தமான பாலை மில்கோ நிறுவனமே கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, மில்கோவின் தினசரி உற்பத்தியும் அதிகரித்துள்ளதோடு, இரண்டு இலட்சம் மெற்றக்தொன் ஹைலேண்ட் பால் மா நிறுவனத்திடம் கையிருப்பிலுள்ளது. மில்கோ நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்படும் ஹைலண்ட் பால் மாவின் விலையும் கடந்த வாரம் முதல் 400 கிராம் பாக்கெட் ஒன்றின் விலை 75 ரூபாவாலும் 01 கிலோ பக்கற் ஒன்றின் விலை 190 ரூபாவாலும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

000

Related posts: