பாடசாலை மாணவர்களின் போஷாக்குத் தேவையை பூர்த்தி செய்வதற்காக அரிசியை வழங்க உலக உணவுத் திட்டம் தீர்மானம்!

Saturday, July 9th, 2022

நாட்டிலுள்ள பாடசாலை மாணவர்களின் போஷாக்குத் தேவையை பூர்த்தி செய்வதற்காக இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் அமிலம் (Folic Acid) கலந்த அரிசியை வழங்க உலக உணவுத் திட்டம் தீர்மானித்துள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் நவம்பர் மாதம் முதல் மூன்று மாதங்களுக்கு 2 இலட்சத்து 70 ஆயிரம் கிலோகிராம் அரிசி வழங்கப்படவுள்ளதாக உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான போஷாக்கு திட்டங்களின் இணைப்பாளர் மருத்துவர் கலன பீரிஸ் தெரிவித்தார்.

இதன் மூலம் 7 ஆயிரத்து 800 பாடசாலைகளின் மாணவர்களுக்கு போஷாக்கு நிறைந்த உணவுகளை வழங்க முடியும் என அவர் கூறினார்.

இலங்கையில் உள்ள சிறார்களின் போஷாக்கு நிலையை மேம்படுத்த தொடர்ந்தும் இணைந்து செயற்பட்டு வருவதாக உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஒரு இலட்சத்து 27 ஆயிரம் முன்பள்ளி மாணவர்கள் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இலங்கையில் 5 இலட்சத்து  75 ஆயிரம் முன்பள்ளி மாணவர்கள் உள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார, சமூக மேம்பாட்டு அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்ன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, அவர்களுக்கான காலை உணவுக்காக மேற்கொள்ளப்படும் நிதி ஒதுக்கீட்டை மேலும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதனடிப்படையில், 30 ரூபாவாக இருந்த மாணவர் ஒருவரின் காலை உணவுக்கான தொகையை 100 ரூபா வரை அதிகரிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக நீல் பண்டார ஹபுஹின்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: