பாடசாலை மாணவர்களின் பாதுகாப்புக்காக கல்விச் சுற்றுலாக்களுக்கு புதிய நிபந்தனைகள் – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Monday, January 23rd, 2023

கல்விச் சுற்றுலாக்களில் ஈடுபடும் பாடசாலை மாணவர்களின் பாதுகாப்புக்காக புதிய நிபந்தனைகளை அறிமுகப்படுத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்படி, பயணத்தின் தூரத்தை அதிகபட்சமாக நூறு கிலோமீற்றராக மட்டுப்படுத்தி, மாலை ஆறு மணிக்குள் பாடசாலைகளுக்குத் திரும்புவதற்கான நிபந்தனைகள் கல்விப் பயணங்கள் தொடர்பான சுற்றறிக்கையில் உள்ளடக்கப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

ஒரே நாளில் பயணிக்கக் கடினமான தூரத்தை கல்விப் பயணத்துக்கு பயன்படுத்துவது நடைமுறைச் சாத்தியமில்லை என்றும் இனிமேல் பயணங்களுக்கு ஏற்ற இடங்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.

மாணவர்களின் பாதுகாப்புக்காக தற்போது பின்பற்றப்படும் ஏனைய ஏற்பாடுகள் தொடர்பில் தீவிர கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும், பாடசாலை முதலாம் தவணை ஆரம்பிக்கும் போது திருத்தப்பட்ட சுற்றறிக்கை வெளியிடப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

கடந்த 20 ஆம் திகதி நானுஓயாவில் இடம்பெற்ற விபத்தின் பின்னர் அமைச்சு இது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளது.

தற்போதுள்ள ஏற்பாடுகளின்படி சுற்றுலா செல்ல வலயக் கல்வி அலுவலகத்தில் அனுமதி பெற வேண்டும். மாணவர்கள் பயணிக்கும் வாகனத்தின் பொருத்தம் குறித்து விஷேட கவனம் செலுத்தப்படுகிறது.

மேலும் வாகனம் காப்புறுதி செய்யப்பட வேண்டும். மேலும், பயணத்தின் பாதை விளக்கத்தையும் வலயக் கல்வி அலுவலகத்தின் ஒப்புதலுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: