பழுதடைந்த பரிசிற்றமோல் விற்பனை: யாழ்.நகரில் மருந்தகத்துக்கு சீல்!
Saturday, October 15th, 2016
பழுதடைந்த பரிசிற்றமோல் வில்லையை விற்பனை செய்த குற்றச்சாட்டில் யாழ். நகரப் பகுதியில் அமைந்துள்ள பிரபல மருந்தகம் ஒன்றை உடனடியாக மூடுமாறு நேற்றுமுன்தினம் யாழ்.நீதிவான் நீதிமன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறித்த மருந்தகத்தில் கலாவதியான மருந்து குலுசைகளை விற்பனை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு நுகர்வோர் விவகார அதிகார சபையினால் நேற்று முன்தினம் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டது. குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது அம்மருந்தகத்திற்கு எதிராக ஏற்கனவே இவ்வாறான குற்றச்சாட்டுகள் உள்ளனவா எனவும் அது தொடர்பான அறிக்கையை உடனடியாக முற்படுத்துமாறும் அத்துடன் யாழ்.மாவட்டத்துக்கு பொறுப்பான உணவு மருந்து பரிசோதகரையும் சுகாதார வைத்திய அதிகாரியையும் மன்றில் தோன்றுமாறும் நீதிவான் வழக்குத் தொடுநர்களுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார். பின்னர் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது உணவு மருந்து பரிசோதகர் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி ஆகியோர் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்ததுடன் அம்மருந்தகத்துக்கு இரண்டு குற்றங்கள் உள்ளமையும் நீதிமன்றின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.
மருந்தகத்தின் உரிமையாளர் குற்றச்சாட்டை ஏற்றுக் கொண்டதனையடுத்து அக் குற்றச்சாட்டுக்காக 9 ஆயிரம் ரூபாவை தண்டப்பணமாக செலுத்துமாறும் ஏற்கனவே இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் காணப்படுவதால் மருந்தகத்தை உடனடியாக தற்காலிகமாக மூடுமாறும் நீதிவான் சி.சதீஸ்வரன் உத்தரவிட்டார். அத்துடன் நீதிமன்றில் முற்பட்டிருந்த அதிகாரிகளை குறித்த மருந்தகத்தை சோதனைக்குட்படுத்தி அது தொடர்பான அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் மேலும் உத்தரவிட்டார்.
Related posts:
|
|