பல்கலை மாணவர் பலி தொடர்பான மேலதிக விசாரணை அறிக்கை யாழ்ப்பாண நீதிமன்றில் சமர்ப்பிப்பு!

Friday, March 24th, 2017

யாழ்ப்பாணம் குளப்பிட்டிப் பகுதியில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணை அறிக்கை யாழ்ப்பாண நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி கொக்குவில் குளப்பிட்டி பகுதியால் சென்று கொண்டிருந்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தனர். இச்சூட்டு சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு மற்றும் அதனால் ஏற்பட்ட விபத்தின் காரணமாக சுன்னாகத்தினை சேர்ந்த விஜயகுமார் சுலக்சன், கிளிநொச்சியினைச் சேர்ந்த நடராஜா கஜன் என்பவர்கள் உயிரிழந்தனர்.

இச்சம்பவத்தினை அடுத்து யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய 5 பொலிஸ் உத்தியோகத்தர்களுடைய பதவிகள் பறிக்கப்பட்ட நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக வழக்கு வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த நிலையில் குறித்த வழக்கு நேற்று மீண்டும் யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ்.சதீஸ்கரன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது சந்தேக நபர்கள் 5பேரும் மன்றில் முற்படுத்தப்பட்டிருந்தனர். இவ் வழக்குத் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வரும் குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரியும் மன்றில் தோன்றியிருந்தார். இந்த நிலையில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள் சார்பில் சட்டத்தரணி சிவலிங்கம் ஆஜராகியிருந்தார். மன்றில் தோன்றிய குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரி இதுவரை நடைபெற்ற விசாரணைகள் தொடர்பிலான மேலதிக அறிக்கை ஒன்றனை மன்றிம் சமர்ப்பித்திருந்தார். அத்துடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது என்றும் அதற்கான அனுமதியினை மன்று வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

குற்றப்புலனாய்வு பிரிவினரின் சமர்ப்பணத்தினை ஏற்ற நீதவான் மேலதிக விசாரணைகளை நடத்துவதற்கான அனுமதியினை வழங்கியிருந்தார். இதனைத் தொடர்ந்து மன்றில் தோன்றிய சட்டத்தரணி சிவலிங்கம், குற்ற வழக்குத் தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாண நீதிமன்றம் நடத்தி வருகின்ற நிலையில், முல்லைத்தீவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் குறித்த வழக்கில் தலையீடு செய்யும் வகையில் உயிரிழந்த மாணவர்களுடைய பெற்றோரை அழைத்து பேசியுள்ளார்.

குறித்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் நடத்துள்ள நிலையிலும் முல்லைத்தீவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்கசர் இவ் வழக்கில் தலையீடு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டமை ஏன்? என்று இதுவரை தெரியப்படுத்தப்படவில்லை. குறித்த பொலிஸ் அதிகாரியின் இந் நடவடிக்கை தொடர்பாக உரிய பதில் மன்றில் தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

இதற்குப் பதிலளித்த நீதிவான் இது தொடர்பான உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுளள்து அவர்களினால் குறித்த சம்பவம் தொடர்பான விளக்கம் மன்றுக்கு வழங்கப்படும் என்றார். அத்துடன் சந்தேக நபர்கள் 5 பேரையும் எதிர்வரும் மாதம் 6ஆம் திகதிவரைக்கும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்திரவிட்டார்

Related posts: