பருத்தித்துறை துன்னாலையில் கிராமங்களுக்கிடையில் 4 நாட்களாக தொடரும் மோதல் – விசேட அதிரடிப்படையினர் குவிப்பு !
Sunday, September 4th, 2022பருத்தித்துறை துன்னாலை மேற்கு பகுதியில் இரு கிராமங்களுக்கு இடையேயான மோதல் 4 நாள்களாக நீடித்து வரும் நிலையில் இந்த மோதலில் ஏழு வீடுகள் சேதமடைந்துள்ளதோடு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 25 இற்கு மேற்பட்டோர் தேடப்பட்டு வருகின்றனர்.
நான்கு நாள்களுக்கு முன்னர் இரண்டு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட முரண்பாடு மோதலாக மாற்றமடைந்தது. அது பின்னர் கிராமங்களுக்கு இடையிலான மோதலாக மாறியுள்ளது என நெல்லியடி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வாள்கள், கற்கள் மற்றும் போத்தல்களினால் மோதல்கள் இடம்பெறுவதாகவும் சம்பவம் தொடர்பில் 7 முறைப்பாடுகள் நெல்லியடி பொலிஸ் நிலையத்துக்கு கிடைத்துள்ளன என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவத்தில் ஏழு வீடுகள் சேதமடைந்துள்ளன. சிலர் காயமடைந்துள்ளனர். சம்பவ இடத்தில் பொலிஸார் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.
எனினும் மோதல்கள் தொடர்கின்றன. நேற்று மாலை வரை இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் பெயர் குறிப்பிடப்பட்ட 25 பேர் தேடப்பட்டு வருகின்றனர். நேற்று நண்பகல் 12.30 தொடக்கம் மாலை 6.30 மணிவரை அடங்கியிருந்த மோதல் மீண்டும் இரவு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது” என்று பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|