பரீட்சைகளுக்கான வளவாளர் குழுவில் இணைத்துக்கொள்ள விண்ணப்பம் கோரல்!
Sunday, December 9th, 2018வடக்கு மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவினால் நடத்தப்படும் பரீட்சைகளுக்கான வளவாளர் குழுவில் இணைத்துக் கொள்வதற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
மாகாண திணைக்களங்களில் அமைச்சுக்களில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள் தமது திணைக்களத் தலைவர்கள் ஊடாக இதற்கு விண்ணப்பிக்க முடியுமென செயலாளர் அ.சிவபாதசுந்தரன் அறிவித்துள்ளார்.
அத்துடன் பல்கலைக்கழகங்கள், தேசிய கல்வி நிறுவகம், தேசிய கல்வியியல் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகள், தொழில்நுட்பக் கல்லூரிகள், பாடசாலைகள் உட்பட அரச தனியார் நிறுவனங்களில் கடமையாற்றும் தகைமையுள்ள உத்தியோகத்தர்கள், விரிவுரையாளர்கள் விண்ணப்பிக்க முடியுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தகுதிவாய்ந்த வளவாளர்கள் வினாத்தாள்களைத் தயாரித்தல், விடைத்தாள்களை மதிப்பிடுதல், மதியுரைஞர்களின் உதவி தேவைப்படும் மதிப்பீட்டுக்கும் பரீட்சித்தலுக்குமான சேவை ஆகிய பணிகளுக்கு சேர்த்துக் கொள்ளப்பட உள்ளார்கள்.
போட்டிப் பரீட்சைக்குரிய பாடங்களாக பொது அறிவு, நுண்ணறிவு, மொழித்திறன், கிரகித்தல், பொருளியல் விடயத்துடன் தொடர்புடைய தொழில்நுட்ப பரீட்சை, நூலக விஞ்ஞானம், கணக்காய்வு மற்றும் கணக்கீட்டின் அடிப்படைக் கொள்கைகள், அலுவலக முறைமையும் கணக்கியலும், தகவல் தொழில்நுட்பம், கட்டுரையும் சுருக்கம் எழுதுதலும் ஆகிய பாடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
வினைத்திறமை காண் தடைப்பரீட்சையில் 24 வகையான பாடங்களுக்கும் இதே போல வளவாளர்கள் கோரப்பட்டுள்ளனர்.
மேலதிக தகவல்களுக்கு வடமாகாண சபையின் www.np.gov.lk எனும் இணையத்தளத்தில் சென்று விபரங்களைப் பெற்றுக்கொள்வதுடன் விண்ணப்பப் படிவங்களையும் தரவிறக்கம் செய்து கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|