பயங்கரவாத தாக்குதலை ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்தவில்லை – தயாசிறி ஜயசேகர!

Thursday, July 11th, 2019

பயங்கரவாத தாக்குதல் நடத்திய சஹ்ரான் ஹசீமின் கடும்போக்கு நடவடிக்கைகள் தொடர்பாக, காத்தான்குடி பகுதியில் உள்ள முஸ்லிம் மௌலவிகள் யாரும் முறைப்பாடுகளை மேற்கொண்டதாக தாம் அறியவில்லை என்று, சிரேஷ்ட பிரதி காவற்துறை மா அதிபர் கபில ஜயசேகர தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதல் குறித்த விசாரணைகளை நடத்தி வரும் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் நேற்று சாட்சியமளிக்கும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

அதேநேரம் இந்த தாக்குதல் தொடர்பாக முன்னதாகவே தமக்கு தகவல் எதுவும் கிடைக்கப்பெறவில்லை என்றும் அவர் கூறினார்.

இதேவேளை, நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் நேற்று முன்னிலையாகி இருந்த சிறிலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, இந்த தாக்குதலை ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்தவில்லை என்று தாம் நம்புவதாக கூறினார்.

இலங்கையில் ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கின்ற பல்வேறு நாடுகள் உள்ள நிலையில், வெளிநாட்டு சக்தி ஒன்றினால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகவும், அதற்கு சஹ்ரான் உள்ளிட்டவர்கள் கருவியாக பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேநேரம், இந்த தாக்குதலின் பின்னர் தாம் ஜனாதிபதியின் தலைமையில் நடந்த பாதுகாப்பு சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டமையையும் அவர் உறுதிப்படுத்தினார்.

யார்யாரை பாதுகாப்பு சபைக்கு அழைக்க வேண்டும் என்று தீர்மானிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருப்பதாகவும் தயாசிறி ஜயசேகர சுட்டிக்காட்டினார்.

ஆனாலும் ஜனாதிபதிக்கு அந்த அதிகாரம் இல்லை என்று நாடாளுமன்ற உறுப்பினரும், தெரிவுக் குழுவின் உறுப்பினருமான சரத் பொன்சேகா இதன் போது சுட்டிக்காட்டினார்.

அதற்கான எழுத்தாவணங்கள் உள்ளனவா என்று தயாசிறி கேள்வி எழுப்பியபோது, அதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பதாக பொன்சேகா கூறினார்.

இந்த வர்த்தமானி அறிவிப்பு 1990களில் வெளியாக்கப்பட்டதாகவும், அதன் பின்னர் அது புதுப்பிக்கப்படவில்லை என்றும், தெரிவுக் குழுவின் தலைவர் பிரதி சபாநாயகர் குமாரசிறி கூறினார்.

Related posts: