பயங்கரவாதத் தாக்குதலினால் காயமடைந்த குழந்தைகளுக்கு விசேட சிறுவர் நிதியம்!

Tuesday, June 4th, 2019

நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலினால் காயமடைந்த குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் மரணித்து அல்லது காயமடைந்தமையினால் அநாதைகளான குழந்தைகளுக்காக விசேட சிறுவர் நிதியமொன்றை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விஷேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு பிரதமர் அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது.

சிறுவர் நிதியமானது 500 மில்லியன் ரூபாவினை கொண்டதுடன், அவற்றில் 100 மில்லியன் தொகை அரசாங்கத்தினாலும், ஏனைய 400 மில்லியன் தொகை நன்கொடைகள் மூலமாகவும் பெற்றுக் கொள்ளப்படவுள்ளதாக குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோன்று இந்த தாக்குதலினால் காயமுற்ற நபர்களுக்கு வெளிநாடுகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொள்வதற்கு தேவைப்படும் சந்தர்ப்பங்களில் அரசாங்கத்தினால் அந்த செலவுகளை மேற்கொள்வதற்கும் பாதிக்கப்பட்டவர்களின் விசேட தேவைகளை அடையாளம் காண்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் அரசாங்கம் விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க உள்ளது.

அந்த அமைச்சரவை பத்திரத்தினை பிரதமரினால் இன்று(04) இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தின் போது முன்வைக்கப்பட உள்ளதுடன், இந்த செயற்பாடுகளை மேற்பார்வை செய்வதற்கும் நடைமுறைப்படுத்துவதற்குமாக பிரதமரின் செயலாளரின் தலைமையில் விசேட குழுவொன்றும் நியமிக்கப்பட உள்ளது.

Related posts: