பன்டோரா பேப்பரில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இடம்பெறவில்லை – அமைச்சர் நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டு!

Thursday, October 7th, 2021

பன்டோரா பேப்பரில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் 1990 முதல் 98 வரையிலான காலப்பகுதிக்குள்ளேயே இடம்பெற்றுள்ளதால் அந்த காலப்பகுதியில் பதவியிலிருந்தவர்கள் இது குறித்து பதிலளிக்க வேண்டும் என அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பன்டோரா பேப்பர்கள் குறித்து இரு விதமான கருத்துக்கள் காணப்படுகின்றன. சிலர் அது ஆதாரமற்றது என தெரிவிக்கின்றனர். சிலர் அது நம்பகதன்மை மிக்கது என குறிப்பிடுகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் நான் அந்த இணையத்தளத்திற்கு சென்றவேளை குறிப்பிட்ட பணப்பரிமாற்றங்கள் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மற்றும் பிரேமதாச ஆகியோரின் காலப்பகுதியில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ள நாமல் ராஜபக்ச பலர் 2005 இல் ஆட்சிக்கு வந்த மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தையே குற்றம் சாட்டுகின்றனர் எனவும் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதேவேளை 2005 க்கு பின்னர் இடம்பெற்ற எது குறித்தும் தெரிவிக்கப்படவில்லை எனவும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அப்படியானால் யாரை பொறுப்பாளியாக்க வேண்டும், நிருபாமா ராஜபக்ச எனது உறவினர் தான் ஆனால் பண்டோரா பேப்பரில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இடம்பெறவில்லை எனவும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: