நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 32 வீதமாக குறைவடைந்துள்ளன – நீர்ப்பாசன திணைக்களம் அறிவிப்பு!

Tuesday, November 3rd, 2020

நீர்ப்பாசன திணைக்களத்திற்கு உரித்தான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 32 வீதமாக குறைவடைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

பெரும்போக செய்கையை ஆரம்பிக்குமாறு விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்ட போதிலும், நீர்நிலைகளிலுள்ள நீரின் மட்டமானது மேலும் ஒரு மாதத்திற்கே போதுமானது என நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர்முகாமைத்துவப்  பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, மகாவலி திட்டத்தின் கீழுள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் குறைவடைந்துள்ளது. மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 38 வீதமாகவும் உடவளவ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 37 வீதமாகவும் குறைவடைந்துள்ளது.

எனினும் விக்டோரியா, கொத்மலை, ரந்தெனிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 65 வீதமாக காணப்படுவதாகவும் நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: