நீதியரசர் விக்னேஸ்வரனுக்கு எதிராக தேர்தல் ஆணைக்குழுவில் சி.தவராசா முறைப்பாடு!

Wednesday, July 1st, 2020

அண்மையில் மல்லாகம் குழமங்கால் பகுதியில் நடைபெற்ற தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பரப்புரை கூட்டத்தின்போது மல்லாகம் குழமங்கால் மகா வித்தியாலயத்தின் “பான்ட்” இசை கருவிகளையும் அப்பாடசாலை மாணவிகளையும் வரவேற்பு அணிவகுப்பிற்கு பயன்படுத்தியதாக வடமாகாணசபையின் முன்னாள் எதிர்கட்சித் தலைவர் சி. தவராசா அவர்களினால் தேர்தல் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அம்முறைப்பாட்டில்,

பாடசாலையின் உபகரணங்களையும் மாணவிகளையும் தேர்தல் பரப்புரைக்கு ஈடுபடுத்தியமை தேர்தல் சட்டவிதிகளை மீறிய செயல். அத்துடன் அப்பாடசாலை சாதாரண தரம்வரைதான் வகுப்புகளை கொண்டுள்ளதனால் அம்மாணவிகள் 16 வயதினை அல்லது அதிலும் குறைந்த வயதை உடையவர்களாக இருத்தல் வேண்டும்

16 வயதிற்குட்பட்டவர்களை தேர்தல் பரப்புரைகளுக்கு பயன்படுத்துவது தேர்தல் சட்டவிதி முறைகளை மீறும் செயல் என்பதும் குறிப்பிடத்தக்கது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அம்முறைப்பாட்டில் மேலும்,   தமிழ் மக்கள்; தேசிய கூட்டணியின் வேட்பாளர்களாகிய திருவாளர்கள் நீதியரசர் விக்னேஸ்வரன், சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் க. அருந்தவபாலன் ஆகியோர் பங்குபற்றிய தேர்தல் பரப்புரைக் கூட்டம் கடந்த ஞாயிற்றுகிழமை (28.06.2020) மல்லாகம் குழமங்கால் பகுதியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட அக்கட்சியின் வேட்பாளர்கள் “பான்ட்” இசை அணிவகுப்புடன் மேடைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இவ் “பான்ட்” இசைக்கு பயன்படுத்தப்பட்ட “பான்ட்” வாத்தியக் கருவிகள் மல்லாகம் குழமங்கால் மகாவித்தியாலயத்திற்கு உரித்துடையது என்பதோடு அவ் “பான்ட்” வாத்தியங்களை இசைத்தவர்கள் அப்பாடசாலையின் மாணவிகள் ஆவார் எனவும்,

இது தொடர்பாக வடக்கு மாகாண கல்வி அமைச்சு விளக்கம் கோரி உள்ளதோடு நடவடிக்கை எடுத்துவருவதாகவும் அறியக்கிடக்கின்றது, எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: