நீதிமன்ற நடவடிக்கைகள் மூலம் நிரூபிக்கப்படும்வரை லொகான் ரத்வத்தைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாது – ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அறிவிப்பு!

Wednesday, June 14th, 2023

இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தைக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நீதிமன்ற நடவடிக்கைகள் மூலம் நிரூபிக்கப்படும்வரை அவருக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்கப்போவதில்லை என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

2021 ஆம் ஆண்டு அனுராதபுரம் வெலிக்கடை சிறைச்சாலைகளுக்குள் இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தை பலவந்தமாக நுழைந்த விதம் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட தனிநபர் ஆணைக்குழு, அவர் மீது கொலை முயற்சி குற்றச்சாட்டுகள் உட்பட பல குற்றச்சாட்டுகளை சுமத்தவேண்டும் என பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் நீதிமன்ற நடவடிக்கைகள் மூலம் குற்றச்சாட்டுகள் நிருபிக்கப்படும்வரை இராஜாங்க அமைச்சருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்போவதில்லை என பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் பொதுஜன பெரமுன இராஜாங்க அமைச்சருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமா என கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசத்திடம் ஊடகங்கள் வினவிய போது, பல நடைமுறை பிரச்சினைகள் உள்ளதால் கட்சி அவ்வாறான நடவடிக்கையை எடுக்கும் நிலையில் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

முதலாவது இந்த சம்பவம் குறித்து பொலிஸார் ஏதாவது குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனரா என்பது குறித்து ஆராய வேண்டும் எனவும் பொலிஸார் குற்றச்சாட்டுகளை சுமத்தாவிட்டால் அல்லது உத்தியோகபூர்வமாக குற்றச்சாட்டுகள் பதியப்படாவிட்டால் கட்சியால் எதனையும் செய்ய முடியாது எனவும் கட்சியின் பொதுச்செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் விசாரணை அறிக்கையொன்றை அடிப்படையாக வைத்து மாத்திரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு எதிராக எவராலும் நடவடிக்கை எடுக்க முடியாது என்பதோடு கட்சி அவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டால் அந்த உறுப்பினர் கட்சிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாகவே இராஜாங்க அமைச்சருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சட்டரீதியில் ஏற்றுக்கொள்ளக்கூடிய அடிப்படையில் இருக்க வேண்டும் எனவும் அவை நீதிமன்ற நடவடிக்கைகள் மூலம் நிரூபிக்கப்பட்டால் நாங்கள் நடவடிக்கை எடுக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: