நீதிமன்றத்திற்கு மதிப்பளித்து, சுகாதார தொழிற்சங்கங்கள் செயற்படும் – அமைச்சர் கெஹலிய நம்பிக்கை !

Friday, February 11th, 2022

நீதிமன்றத்திற்கு மதிப்பளித்து, சுகாதார தொழிற்சங்கங்கள் செயற்படும்  எனத் தாம் நம்பிக்கை கொள்வதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

வேதன உயர்வு உள்ளிட்ட 7 கோரிக்கைகளை முன்னிறுத்தி, தாதியர், இடைநிலை மற்றும் நிறைவு காண் சேவை உள்ளிட்ட 18 சுகாதார தொழிற்சங்கங்கள் இந்த பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்தன.

இந்த நிலையில், உடன் அமுலாகும் வகையில் தொழிற்சங்க நடவடிக்கையை கைவிடுமாறு, அரச தாதியர் சங்கத்திற்கும், அதன் தலைவர் சமன் ரத்னப்பிரியவுக்கும் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டபோது, கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுடன் அண்மையில் இடம்பெற்ற  பேச்சுவார்த்தை தோல்வியில் நிறைவடைந்தநிலையில், தமது பணிப்புறக்கணிப்பினை தொடர்ச்சியாக முன்னெடுக்கவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்கள் அறிவித்தன இதன் அடிப்படையில் தாதியர்கள்,  துணை மருத்துவர்கள், பொது சுகாதார உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட 18 சுகாதார தொழிற்சங்கங்கள் இந்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன.

இதன் காரணமாக, நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைகளுக்காக சென்ற நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கினர்.

இந்தநிலையில், நியாயமற்ற கோரிக்கைகளை முன்வைத்துப் பிரதிவாதிகளான தொழிற்சங்கங்களினால் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, சுகாதார சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால், நோயாளர்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கி உள்ளதாக சட்டமா அதிபர் தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இந்த முறைப்பாட்டை பரிசீலித்த கொழும்பு மாவட்ட நீதிமன்றம், குறித்த தொழிற்சங்க நடவடிக்கைக்கு எதிர்வரும் 24 ஆம் திகதிவரை தடை விதித்து உத்தரவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது

எவ்வாறிருப்பினும், தாதியர், இடைநிலை மற்றும் நிறைவுகாண் சேவை தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள நாடு தழுவிய போராட்டத்தைக் கைவிடுவதற்கு, நீதிமன்றால் விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவு குறித்து தமக்கு இதுவரையில் அறியப்படுத்தப்படவில்லையென அந்த சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

மிகவும் குறுகிய பேச்சுவார்த்தைகள் மூலம் இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும். எனினும், 3 மாதங்களாக முன்னெடுக்கப்படும் இந்த நடவடிக்கைக்கு செவிசாய்க்காமல், சுகாதார அமைச்சு பேச்சுவார்த்தைகளிலிருந்து விலகியுள்ளது.

எவ்வாறிருப்பினும், நீதிமன்ற நடவடிக்கை தொடர்பில் சுகாதார அமைச்சு செயற்படுவதாக 3 நாட்களுக்கு முன்னர் தாங்கள் அறிந்ததாக ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தின் தீர்மானம் குறித்த அறியப்படுத்தல் வழங்கப்பட்டால், நீதிமன்றத்திற்கு மதிப்பளித்து, சட்ட ஆலோசனைகளுக்கு அமைய, போராட்டம் தொடர்பான அடுத்த நடவடிக்கை தீர்மானிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, 8 கோரிக்கைகளை முன்வைத்து, வைத்தியசாலைகளின் கனிஷ்ட ஊழியர்கள் இன்றுமுதல் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக, ஒன்றிணைந்த சுகாதார சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: