நீதிபதி சரவணராஜா விவகாரம் – விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் தெரிவிப்பு!

Wednesday, November 22nd, 2023

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கௌசல்ய நவரத்ன தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் தொடர்பிலான விசாரணை அறிக்கையின் பிரதி மற்றும் அதற்கான காரணம் தொடர்பான தகவல்களை பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் வழங்குவார்.

குறித்த அறிக்கையானது சம்பந்தப்பட்ட நிறுவனங்களால் தொகுக்கப்பட்டுள்ள நிலையில், அதன் நகலை சமர்ப்பிக்குமாறு பொது பாதுகாப்பு அமைச்சரைக் கோரியுள்ளதாகவும் இந்த வாரத்தில் அது கிடைத்ததும் தேவையான நடவடிக்கைகளை எடுப்போம் எனவும் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கௌசல்ய நவரத்ன கூறியுள்ளார்.

நீதிபதி சரவணராஜா தமது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி தான் வகித்து வந்த பதவிகளை விட்டு விலகுவதாக கடந்த செப்டம்பர் மாதம் நீதிச் சேவை ஆணைக்குழுவிற்கு கடிதமொன்றின் ஊடாக அறிவித்துவிட்டு நாட்டைவிட்டு வெளியேறிருந்தார்.

முல்லைத்தீவு குருந்தூர்மலை விகாரை தொடர்பான வழக்கு தொடர்பாக அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் அதனையடுத்து அவர் பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறியதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: