நிரந்தர வாழிடங்களை பெற்றுக்கொள்ள வழிவகை செய்துதாருங்கள் – ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிடம் உதயபுரம் மக்கள் கோரிக்கை!
Tuesday, December 4th, 2018நிரந்தர வீடுகள் இன்மையால் தாம் பெரும் அவலங்களுக்கு முகங்கொடுக்க நேரிடுவதுடன் தமது பிள்ளைகளின் கற்றல் நடவடிக்கைகளுடன் சுகாதார சீர்கேடுகளும் தம்மை பாதிப்பதாகவும் இவற்றுக்கான தீர்வை பெற்றுத்தருமாறும் அரியாலை தென்கிழக்கு பெரியதோட்டம் உதயபுரம் பகுதி மக்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
குறித்த பகுதி மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் முகமாக அப்பகுதிக்கு சென்றிருந்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் அம்பலம் இரவீந்திரதாசனிடம் மக்கள் இவ்வாறு கோரிக்கை விடுத்தனர்.
இதன்போது அவர்கள் மேலும் தெரிவிக்கையில் –
நீண்டகாலமாக நிரந்தர வீடுகள் இன்றி வாழ்ந்து வருவதாகவும் கடந்த நல்லாட்சி காலத்தில் தாம் குறித்த வீட்டுத்திட்ட தெரிவுகளில் பாகுபாடுகளால் புறக்கணிக்கப்பட்டதாகவும் தெரிவித்த மக்கள் குறித்த வீட்டுத் திட்டத்தை தமக்கு பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கோரிக்கை விடுத்தனர்.
அத்துடன் தமது வாழ்வாதார தொழில் நடவடிக்கைகளுக்காக கடற்றொழில் உபகரணங்கள் மற்றும் சுயதொழில் கடனுதவி போன்றவற்றை பெற்றுத்தருமாறும் கோரிக்கை விடுத்தனர்.
மக்களது பிரச்சினைகள் தொடர்பில் அவதானம் செலுத்திய அம்பலம் இரவீந்திரதாசன் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களது கவனத்திற்கு கொண்டுசென்று பெற்றுத்தர முயற்சிப்பதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|