நாளாந்தம் ஒரு சிறுமியாவது துஷ்பிரயோகத்துக்குள்ளாகும் நிலை காணப்படுகிறது – சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் சிறுவர் வைத்திய நிபுணர் சுட்டிக்காட்டு!

Tuesday, July 27th, 2021

நாளாந்தம் பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்பட்ட நிலையில் ஒரு சிறுமியாவது வைத்தியசாலைக்கு வருவதாக சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் சிறுவர் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

தாக்குதல் காரணமாக எலும்பு முறிவுகளுக் குள்ளான சிறுவர்கள், சிகரெட் துண்டுகளால் உடல் சுடப்பட்ட சிறுவர்கள் அல்லது பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்பட்ட சிறுவர்கள் என நாளாந்தம் ஒன்று அல்லது இரண்டு சிறுவர்கள் வைத்தியசாலைக்கு வருகை தருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது மிகவும் துரதிர்ஷ்டவசமான சூழ்நிலை என்று பொரளை யிலுள்ள உள்ள சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் சிறுவர் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.

அத்துடன் உடல் மற்றும் மன ரீதியாக சிறுவர்கள் தொடர்ந்தும் துன்புறுத் தலுக்குள்ளாவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த சிறுவர் வைத்தியர்களும் ஊடகங்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காணப்படுவதாகவும் அதில் சிறுவர்கள் தாக்கப்படுவது, துன்புறுத்தலுக்குள்ளாவது, பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுவது எனத் தெரியவந்துள்ளது.

அது மாத்திரமன்றி சிறுவர்களுக்கு மது அருந்தக் கொடுப்பது, சிறுவர்கள் மாத்திரமன்றி சிறுமிகளும் இதற்கு இலக்காவதாகத் தெரியவந்துள்ளது.

மேலும் செல்வந்த வீடுகளுக்குச் சிறுவர்கள் வீட்டுப் பணிக்காக அமர்த்தப்படுகிறார்கள். அத்தோடு தற்போது தாய், தந்தை இல்லாத 13 ஆயிரம் சிறுவர்கள் அநாதை இல்லங்களில் உள்ளனர்.

இதேவேளை சில சிறுவர்கள் துஷ்பிரயோகத்துக்குட்பட்ட போதும் அவை குறித்த தகவல்கள் வெளிவருவதில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போது சிறுவர்கள் தமது அப்பா, சித்தப்பா ஆகியோரால் துஷ்பிரயோகத்திற் குட்படுத்தப்படுதாகவும் இது மிகவும் துயரமானது என்றும் அவர் கூறினார்.

பெரும்பாலான சிறுவர்கள் துஷ்பிரயோகத்துக் குட்பட்டால் அதைச் சொல்ல மாட்டார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை சிறுவர்கள் 18 வயது வரை கல்வி கற்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர் அதற்காக சிறுவர்களைப் பாடசாலைக்கு அனுப்ப வேண்டும் என்றும் எவரது வீட்டிலாவது சிறுவர்களை வீட்டுப் பணிக்காக வேலையில் அமர்த்தினால், சிறுவர்கள் கடையில் பணிபுரிந்தால் மற்றும் சிறுவர்களைத் தாக்கினால் அண்மையில் உள்ள பொலிஸ் நிலையத்தில் தகவல் வழங்குமாறு வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: