நாட்டில் ஏற்படுத்தப்ட்ட அமைதியின்மையே ஆகஸ்ட் உடன்படிக்கை செப்டம்பருக்கு சென்றுள்ளது- ஜனாதிபதி குற்றச்சாட்டு!

Sunday, July 31st, 2022

இலங்கையின் பொருளாதார நெருக்கடியிலிருந்து திவாலான நாட்டை மீட்டெடுக்க உதவும் சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம், கடந்த வாரங்களாக ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக செப்டெம்பர் மாதத்திற்கு பின் தள்ளப்பட்டுள்ளதாக இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் ஒரு உடன்படிக்கையை எட்ட இலக்கு வைத்திருந்தாலும், தற்போது அது ஒரு மாதம் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்தச் சம்பவங்களுக்குப் பிறகு மீட்புப் பொதி குறித்து சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுக்கள் நகரவில்லை என்று விக்கிரமசிங்க கூறியுள்ளார்.

கடுமையான வெளிநாட்டு நாணயத் தட்டுப்பாடு காரணமாக வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதை இடைநிறுத்துவதாக இலங்கை கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்தது.

இலங்கை 51 பில்லியன் டொலர் வெளிநாட்டுக் கடனை செலுத்த வேண்டும், இதில் 28 பில்லியன் டொலர்கள் 2027 க்குள் செலுத்தப்பட வேண்டும்.

இந்தநிலையில் நாணய நெருக்கடி காரணமாக எரிபொருள், மருந்து மற்றும் சமையல் எரிவாயு போன்ற பல முக்கியமான இறக்குமதி பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.

இதேவேளை நெருக்கடியை எதிர்கொள்ள பல கட்சி அரசாங்கத்தில் தன்னுடன் இணையுமாறு 225 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விக்கிரமசிங்க வெள்ளிக்கிழமை கடிதம் எழுதியுள்ளார். முன்னாள் தலைவர்களை குற்றம் சாட்டுவது பிரச்சினையை தீர்க்காது, ஆனால் நாடு மேலும் வீழ்ச்சியடைவதைத் தடுக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று அவர் இன்று மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அரசியல் குழப்பங்கள் ஏற்பட்டன, இதன் விளைவாகவே நான் இன்று அதிபராக தெரிவாகி உள்ளேன் என குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நான் அதிபர் ஆனாலும் இன்னும் நாட்டில் உள்ள பிரச்சினைகள் தீரவில்லை, நம் நாட்டில் உருவாகி இருக்கும் பொருளாதார நெருக்கடி இன்னும் நீடிக்குமானால் இந்த நாடு இல்லாமல் போய்விடும் ஆபத்து உள்ளது” எனவும் சுட்டிக்காட்டினார்.

நாட்டில் பொருளாதாரத்தை மேம்படுத்த நாம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம், தீர்வுகளை காண முற்பட்டுள்ளோம், நாட்டின் இன்றைய நிலைக்கு பல்வேறு விதமான காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன எனினும் தற்போது இவற்றைக் குறித்து வாதாடி கொண்டிருக்கப்போகின்றோமா? இல்லையெனில் இதற்கான தீர்வுகளை பெறப்போகின்றோமா? எனவும் கேள்வியெழுப்பினார்

ஜூலையில் சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடிய பின்னர் நாணய நிதியத்தின் உதவியை பெறுவதே எனது நோக்கமாக இருந்தது எனினும் அது ஓகஸ்ட் வரை அது தள்ளிப் போயுள்ளது.

இன்று நாம் இந்த சவாலை பொறுப்பேற்கா விட்டால் நாளைய சமுதாயத்திற்கு நாடு இல்லாமல் போய்விடும். அனைவரும் சவால்களுக்கு முகம் கொடுத்து அதில் இருந்து வெளியே வரவேண்டும், பொறுப்புகளை ஏற்க வேண்டும், அமைதியாக இருந்தது போதும் அனைவரும் வேலைகளை செய்ய ஆரம்பிப்போம், நம் மக்களுக்கு நமது பிரச்சனைகளை எடுத்துச் செல்ல வேண்டும், அனைவரும் ஒன்றாக இணைந்து வேலை செய்ய வேண்டும் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்

இதேவேளை “என்னை போ போ என்று சொல்லவேண்டாம், இதனால் இலங்கை என்ற நாடே இல்லாமல் போய்விடும் ஆபத்து ஏற்படப் போகிறது” என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று கண்டிக்கு விஜயம் செய்த அதிபர் ரணில் விக்ரமசிங்க கண்டி தலதா மாளிகையில் இருந்து விசேட உரையொன்றை வழங்கிய போதே இவ்வாறு தெரிவித்தார்.

“என்னை வீட்டுக்கு செல்ல வேண்டி போராட்டம் நடத்த வேண்டாம், எனக்கு வீடு இல்லை முடியுமானால் எனது வீட்டை கட்டித்தாருங்கள் இல்லை என்றால் நாட்டை கட்டி எழுப்புங்கள் இரண்டையும் செய்யாது என்னை போ போ என்று சொல்லவேண்டாம், இதனால் இலங்கை என்ற நாடே இல்லாமல் போய்விடும் ஆபத்து ஏற்படப் போகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: