நாட்டின் பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்தும் நோக்கில் பொருளாதார பேரவையை வாராந்தம் கூட்டுவதற்கு ஜனாதிபதி தீர்மானம்!

Tuesday, March 8th, 2022

பொருளாதார பேரவையை வாராந்தம் கூட்டுவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.

பெருநிலைப் பொருளாதாரக் கொள்கை, கொவிட் – 19 பெருந்தொற்று நிலைமையின் பின்னர் தேசிய பொருளாதாரத்தின் செயற்பாடு, பொருளாதார மீள்கட்டமைத்தல், அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கை மற்றும் நிதிக் கொள்கைகளில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும் முக்கிய அபிவிருத்திக் கருத்திட்டங்கள் உள்ளிட்ட பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பாக மிகவும் ஆழமாகக் கலந்துரையாடி, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பேரவையின் ஆலோசனைகள், வழிகாட்டல்களுக்கமைய ஏற்புடைய அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் நியதிச்சட்ட நிறுவனங்கள் தேவையான சந்தர்ப்பங்களில், அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் இயைபுடைய தீர்மானங்களை நடைமுறைப்படுத்தவும், தேவைக்கேற்ப பொருளாதாரப் பேரவைக் கூட்டத்திற்கு போதுமான துறைசார் அறிவுகொண்ட கல்வியியலாளர்களை அழைக்கவும், ஜனாதிபதியினால் மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கப்படும் படிமுறைகள் தொடர்பாக அமைச்சரவையின் உடன்பாட்டை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, பொருளாதார பேரவையின் கட்டமைப்பு ஜனாதிபதி, பிரதமர், வர்த்தக அமைச்சர், நெடுஞ்சாலைகள் அமைச்சர், நிதி அமைச்சர், விவசாய அமைச்சர், பெருந்தோட்டத்துறை அமைச்சர், மத்திய வங்கி ஆளுநர், ஜனாதிபதியின் செயலாளர், திறைசேரி செயலாளர் மற்றும் மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் ஆகியோரின் அடிப்படையில் அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது..

Related posts: