நாட்டின் சுற்றுலா வலயங்களிலுள்ள அனைத்து வீதிகள் அபிவிருத்தி செய்யப்படும் – அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவிப்பு!

Monday, August 16th, 2021

நாட்டின் அனைத்து சுற்றுலா வலயங்களிலும் உள்ள  வீதிகள் அபிவிருத்தி செய்யப்படும் என தெரிவித்துள்ள நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அபிவிருத்தி செய்ய  வேண்டிய வீதிகள் தொடர்பான விரிவான அறிக்கையை வழங்குமாறும் அமைச்சின் செயலாளர் ஆர்.டபிள்யு. பிரேமசிரிக்கு  ஆலோசனை வழகியுள்ளார்.

நெடுஞ்சாலை அமைச்சில் நடைபெற்ற கூட்டத்தின்போதே அவர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.

மேலும் சுற்றுலாத்துறையின் ஊடாக எமது நாடு அதிக அளவில் அந்நிய செலாவணியைப் பெறுகிறது. சுற்றுலாத் துறையை மேம்படுத்ததுவதாக இருந்தால் உள்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்ய வேண்டும். அனைத்தும் இலவசமாக அருகில் வரும்வரை காத்திருக்க முடியாது.

நாம் பல வருடங்கள்  முன்னோக்கி சிந்தித்து  செயற்பட  வேண்டும். எமது  நாடு  மிகவும் அழகான நாடு. இது முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், அழகிய சூழல்கள், கடற்கரைகள், காடுகள், நீர்வீழ்ச்சிகள், ஆறுகள், ஏரிகள் மற்றும்  மத ஸ்தலங்கள்  நிறைந்த நாடு. மேலும், பல்வேறு காலநிலை  வலயங்கள்  உள்ளன. சில மணிநேரங்களில்  வெவ்வேறு காலநிலை  வலயங்களின் அனுபவத்தை பெற   முடியும்.  உலகின் உயிரியல் பன்முகத்தன்மை கொண்ட இடங்களில் ஒன்றாக எமது நாடு காணப்படுகிறது.

நாம் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க வேண்டுமானால் தேவையான வசதிகளை வழங்க வேண்டும்.  உள்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்ய வேண்டும். இவை எங்களை பற்றி சிந்தித்து செய்யும் பணிகளல்ல. எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்தே செயற்பட வேண்டும்.

எனவே, சுற்றுலா வலயங்களில் அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய வீதிகள் தொடர்பான     விரிவான அறிக்கையொன்றை  சமர்ப்பிக்குமாறு  நெடுஞ்சாலை அமைச்சின் செயலாளர் ஆர்.டபிள்யு.ஆர். பிரேமசிறி மற்றும் நெடுஞ்சாலை அமைச்சின் அதிகாரிகளுக்கு  அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: