நாடு முழுவதும் 359 சித்தமருத்துவ மாணவர்கள் உள்ளக பயிற்சிக்காக காத்திருப்பு – சித்த மருத்துவ மாணவகுழுவின் யாழ் பிரதிநிதி வர்ணகுலசிங்கம் பிரவீன் தெரிவிப்பு!

Tuesday, May 7th, 2024

இலங்கை பூராகவும் 359 சித்தமருத்துவ மாணவர்கள் உள்ளக பயிற்சிக்காக காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளதாக உள்ளக பயிற்சிக்கு எதிர்பார்க்கும் சித்த மருத்துவ மாணவகுழுவின் யாழ் பிரதிநிதி வர்ணகுலசிங்கம் பிரவீன் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:-

ஆயுர்வேதத் திணைக்களத்தின் குளறுபடியான சில நடவடிக்கைகள் மூலம் நாம் பாதிக்கப்பட்டுள்ளோம். இதனால் நமது உள்ளகபயிற்சி தடைபட்டுள்ளது.

அவர்களுடன் எங்களுடைய பிரச்சனை தொடர்பில் பேசியிருந்தபோதிலும் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு 60 பேருக்கு மாத்திரம் அனுமதி வழங்கி இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

உள்ளக பயிற்சி என்பது அனைத்து மாணவர்களுக்குமான உரிமையாகும். எவ்வாறு 60 மாணவர்களுக்கு மாத்திரம் இந்த அனுமதியினை பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு வழங்க முடியும்.

அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீடு காரணமாகவே இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள போதிலும் இது அரசாங்கத்தின் தவறு ஒழிய மாணவர்களுடைய தவறல்ல. இதற்குக் காரணம் ஆயுர்வேத திணைக்களம் உள்ளிட்ட ஏனைய திணைக்களங்கள்.

இவர்களுடைய இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் நமது கற்க நெறியை பூரணமாக நிறைவு செய்ய முடியாத நிலையில் இருக்கின்றோம்.

தற்பொழுது 30 வயதினை எட்டி இருக்கின்ற போதிலும் நீண்ட காலமாக உள்ளகப் பயிற்சியினை முடிக்காததனால் எமது கற்கை பூரணப்படுத்தப்படவில்லை. உள்ளக பயிற்சி நிறைவு செய்யப்பட்டால் மாத்திரமே ஆயுர்வேத சங்கத்தில் எங்களை ஒரு வைத்தியராக பதிவு செய்ய முடியும் என்றும் தெரிழவித்திரந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: