நாடு முடக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்படவில்லை – பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவிப்பு!

Tuesday, August 10th, 2021

நாடு முடக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முற்றிலுமாக நிராகரிக்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ள சுகாதார அதிகாரிகள் தேவைப்படும்போது பொருத்தமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த தளர்வுகளுடனான முடக்கம் மற்றும் ஏனைய கட்டுப்பாடுகள் குறித்து பரிசீலிக்கப்படுவதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலைமையை முழுமையாக ஆய்வு செய்த பின் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை திருமணங்கள் மற்றும் இறுதிச் சடங்குகளுக்கான சில கட்டுப்பாடுகளைத் திருத்துவது குறித்து முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், நாடு முடக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்திருந்தார்.

அதிகாரிகளுடன் கலந்தாலோசித்த பின்னர் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

இது விவாதிக்கப்படும் ஒரு விடயம் என்றும் நாட்டை முடக்குவதே ஒரே ஒரு வழி என்றும் கூறிய அவர், எவ்வாறிருப்பினும் பல காரணிகளை ஆராய்ந்த பின்னரே என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முடிவு செய்யப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பதை கட்டுப்படுத்த முடக்கத்தை அமுல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரித்து வருகின்றன.

இருப்பினும், பொருளாதாரத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற காரணத்தால் முடக்கத்தை அமுல்படுத்த அரசாங்கம் தயங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: