நவீன விவசாய மயமாக்கல் திட்டத்தின் கீழ் யாழ். நகரிலிருந்து துபாய்க்கு வாழைப்பழங்கள் ஏற்றுமதி!

Friday, May 5th, 2023

நவீன விவசாய மயமாக்கல் திட்டத்தின் கீழ், யாழ்ப்பாணத்திலிருந்து துபாய்க்கு வாழைப்பழங்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இத்திட்டத்தின் அறிமுக நிகழ்வு புதன்கிழமை (03) நடைபெற்றது.

யாழ்ப்பாணம் நிலாவரைச் சந்தியில் அமைக்கப்பட்டுள்ள வாழைக்குலை பதப்படுத்தல் நிலையத்தில், இந்நிகழ்வு நடைபெற்றது. யாழ். குடாநாட்டில் கோப்பாய், உடுவில், தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளிடமிருந்து, கொள்முதல் செய்யப்படும் கதலி வாழைப்பழங்கள் நிலாவரையிலுள்ள வாழைப்பழம் சுத்திகரிப்பு நிலையத்தில் பதப்படுத்தப்பட்டு அங்கிருந்து நேரடியாக துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு துபாய்க்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இதன் மூலம் நாட்டுக்கு அந்நிய செலாவணி கிடைப்பதுடன், உள்ளூர் விவசாயிகளுக்குப் பெரிதும் நன்மை கிடைக்குமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இத்திட்டத்தின் மூலம் முதல் கட்டமாக 10,000 கிலோ வாழைக்குலைகள் வாரந்தோறும் ஏற்றுமதி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இத்திட்டம், அனுராதபுரம் இராஜாங்கனை வாழைப்பழ ஏற்றுமதி திட்டத்துக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய திட்டமாக உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: