நல்லூர் திருவிழா தொடர்பில் எதிர்வரும் தினங்களில் இறுக்கமான சுகாதாரக் கட்டுப்பாடுகள் – பக்தர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ள சுகாதார வைத்திய அதிகாரி!

Saturday, August 15th, 2020

நல்லூர் கந்தசாமி ஆலய திருவிழாவின்போது எதிர்வரும் தினங்களில் இறுக்கமான சுகாதாரக் கட்டுப்பாடுகள், விதிமுறைகள் பேணப்படும் என யாழ் மாநகரசபை சுகாதார வைத்திய அதிகாரி அறிவித்துள்ளார்.

அத்துடன் கொரோனா தொற்றுக்கான சுகாதார வழிகாட்டல்களை மீறி சமூக இடைவெளியைப் பொருட்படுத்தாமல் செயற்படுபவர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல், நோய்த்தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டிய துரதிர்ஷ்ட நிலைஏற்பட வாய்ப்புள்ளது எனவும் அவா் அறிவுறுத்தியுள்ளார்.

நல்லூர் திருவிழா நடவடிக்கைகளை சுகாதார வழிமுறைகளுடன் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான பக்தர்களுடன் முன்னெடுக்குமாறு சுகாதார பணிப்பாளர் நாயகம் மற்றும் மாகாண சுகாதார பணிப்பாளர் ஆகியோர் அறிவுறுத்தியுள்ளனர்.

தொற்றுநோய் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறி பக்தர்கள் ஆலய சூழலில் கூடும் சந்தர்ப்பத்தில் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டு அனைவரும் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி பொறுப்புணர்வுடன் செயற்படுமாறு யாழ் மாநகர சபை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: